Sunday, December 25, 2005

புகை வேலைக்குப் பகை

இன்று ஒரு செய்தி கண்ணில் பட்டது. இங்கிலாந்தில் ஒரு பெண்மணி பணிக்குச் சேர்ந்து முக்கால் மணி நேரத்தில், தன் மேலாளரிடம் தான் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று ஒப்புக் கொண்டு வேலையை இழந்தார் ! டாடா ·ப்ளோ கம்யூனிகேஷன்ஸ் என்ற அந்த நிறுவனம், அப்பெண் பணி நேரத்தில் புகை பிடிக்க மாட்டேன் என்று உறுதி கூறியும், புகை பிடிப்பவரை பணிக்கு அமர்த்துவதை நிறுவனத்தின் பாலிஸி அனுமதிப்பதில்லை என்று கூறி விட்டது !

ஒருவர் பணிக்கு ஏற்றவரா என்று நிர்ணயிப்பதற்கு பல முக்கியத் தகுதிகள் இருக்கையில், புகை பிடிப்பவர் பணியில் சேர தடை விதிக்கும் நிறுவன நிர்வாகத்திற்கு எதிராக சட்டபூர்வமாக நடவடிக்கை கோரப் போவதாக ஸோ·பி என்ற அப்பெண் கூறியிருக்கிறார். நேர்முகத் தேர்வின் போது புகை பிடிப்பது குறித்து தன்னை எதுவும் கேட்காமல் விட்டது யார் குற்றம் என்றும் கேள்வி எழுப்புகிறார்.

நிர்வாகமோ, தங்கள் பாலிசி சட்டத்திற்குட்பட்டது தான் என்றும், அவ்வாறு புகை பிடிப்பவரை பணியில் சேரா வண்ணம் நேர்மறையாக ஒதுக்குவதில் (positive discrimination) நிறுவனம் பெருமைப்படுகிறது என்றும் மார் தட்டுகிறது! புகை பிடிப்பவரின் உரிமையை வலியுறுத்தும் FOREST என்ற அமைப்போ, நிறுவன வளாகத்துள் புகை பிடிக்கத் தடை விதிப்பது என்பது வேறு, புகை பிடிப்பவரை பணிக்கு அமர்த்த தடை என்பது அராஜகம் என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இந்தக் கூத்தையெல்லாம் பார்த்தா, நம்ம அமைச்சர் அன்புமணி எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணுதுங்க, என்ன நான் சொல்றது ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா


நன்றி: Deccan Chronicle

Saturday, December 17, 2005

நன்றி கெட்ட மாந்தரடா! Ganguly அறிந்த பாடமடா!

இந்திய கிரிக்கெட்டில் அரசியலும், அநியாயச் சார்பும், டால்மியாவின் இரும்புப் பிடியிலிருந்து கிரிக்கெட் வாரியம் விடுபட்டதால், குறைந்து விடுவதற்கு வாய்ப்பிருப்பதாக பலரும் நம்பிக் கொண்டிருந்த வேளையில், டெஸ்ட் அணியிலிருந்து கங்குலியை நீக்கிய செயல், எதுவும் மாறவில்லை என்பதை நிரூபித்துள்ளது! கங்குலியை விலக்கியதற்கு நாற்றமிகு அரசியலே காரணம் என்று எண்ணுவதற்கு காரணங்கள் உள்ளன! இத்தனைக்கும், தில்லி டெஸ்டில் அவர் அணியின் நலன் கருதி பொறுப்பாகவே விளையாடினார். முதல் இன்னிங்க்ஸில் சச்சினுடனும், இரண்டாவதில் யுவராஜுடனும் கங்குலி கூட்டு சேர்ந்து விளையாடியதில், அணிக்கு முறையே 121 ரன்களும், 81 ரன்களும் கிடைத்தன. அவற்றில், கங்குலி எடுத்தது, 40 மற்றும் 39 ரன்கள். தகுதி அடிப்படையில் அவர் நீக்கப்பட்டார் என்றால், அவரை விட 2 ரன்களே அதிகம் எடுத்த லஷ்மண் மற்றும் 2 டெஸ்டுகளில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே வீழ்த்திய அகர்கரும் என்ன கிழித்தார்கள் ?

கிரன் மோரே என்னும் மடையரின் தலைமையில் உள்ள தேர்வுக்குழு தாங்கள் ஜோக்கர்கள் என்பதை உணர்த்தியுள்ளனர் ! தேர்வுக்குழு தலைவராக நீடிக்க வேண்டும் என்பதற்காக, மோரே எப்படி பச்சோந்தியாக மாறி பவார் தரப்புக்கு ஓடினார் என்பது நாம் அறிந்தது தான்! கங்குலியின் பல செயல்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிட்டாலும், எதற்கு அவரை 'ஆல்ரவுண்டர்' என்று கூறி அணியில் சேர்த்து விட்டுப் பின் நியாயமான காரணமின்றி விலக்க வேண்டும் என்பதே ஆதாரக் கேள்வி. திமிர் பிடித்த மோரே தேர்வுக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், கங்குலி நான்காம் இறக்கத்தில் (4 DOWN) ஆட வருவது தனக்கு விருப்பமில்லை என்கிறார்!!! இவரது தனிப்பட்ட விருப்பத்தை யார் கேட்டார்கள் ? கிட்டத்தட்ட 15000 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ள ஒருவரை, கவைக்குதவாத ஐந்து ஜால்ராக்கள் தூக்கி எறிவதைப் பார்க்கும்போது எரிச்சல் மண்டுகிறது !!!

கிரன் மோரையை விடுத்து மீதமுள்ள நான்கு உறுப்பினர்களில் இருவருக்கு கிரிக்கெட் விளையாட்டுடன் ஸ்நானப்பிராப்தி கிடையாது ! மற்றும் பூபிந்தர் சிங் என்பவர் 2 ஒரு நாள் போட்டிகளிலும், VB சந்திரசேகர் 5 ஒரு நாள் பந்தயங்களிலும் விளையாடி இருக்கின்றனர் ! தேர்வுக்குழுவில், எப்பேர்ப்பட்ட கிரிக்கெட் அனுபவம் நிறைந்திருக்கிறது, பாருங்கள் !?! இதில், அடிப்படைப் பிரச்சினை, தேர்வுக்குழு உறுப்பினரின் நேர்மை, கிரிக்கெட் அறிவு மற்றும் அனுபவம் ஆகியவை கேள்விக்குறி ஆகி விட்டன.

தேர்வுக்குழு உறுப்பினர் என்பவர், குறைந்த பட்சம் 25 டெஸ்ட்களிலோ, 40 ஒரு நாள் போட்டிகளிலோ விளையாடியவராக இருப்பது ஓர் அவசியமான தகுதியாக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுளது. மேலும், தேர்வுக்குழுவை நிறுவதில் வெளிப்படையான ஒரு தேர்வு முறை இருப்பதும், உறுப்பினர்களுக்கு தகுந்த ஊதியமும் வழங்கப்படுவதும் அவசியமாகிறது. நல்ல சன்மானம் இல்லாததால் தான், திறமை மிக்க ரவி சாஸ்திரி, நவ்ஜோத் சித்து, மொகிந்தர் அமர்நாத் போன்றவர்கள் உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொள்ள முன் வருவதில்லை.

கங்குலி விலக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாப்பல், கங்குலி நன்றாக விளையாடுவதாக நம்பிக்கை தெரிவித்து விட்டு, அடுத்த நாள் தேர்வுக்குழு கூட்டத்தில் என்ன கூறினாரோ ? அதனால், கங்குலியின் நீக்கத்தில், அணியை நல்ல முறையில் வழி நடத்திக் கொண்டிருக்கும் சாப்பலுக்கும், டிராவிட்டுக்கும் பங்கிருக்கும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. டிராவிட் கூறிய, "That is the way International cricket is!" மற்றும் கங்குலிக்கு ஆதரவாகப் பேசியவர்களைக் குறித்துக் கூறிய, "They don't represent the Indian public" போன்றவை மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன! கேப்டன் ஆன சில மாதங்களிலேயே இப்படி ஒரு மாற்றமா ? இத்தனைக்கும் இதே டிராவிட் ஒரு நாள் பந்தயங்களுக்கு லாயக்கிலாதவர் என்ற சர்ச்சை எழுந்தபோது, கங்குலி அவருக்கு தோள் கொடுத்தவர் தான் !

லஷ்மிபதி பாலாஜியும், சகீர் கானும் அணியில் இடம் பெறாததற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. சகீர் கானிடம் திறமை இருந்தாலும், Attitude சரியில்லை என்று சொல்லப்படுகிறது. அதை சரி செய்து, அவரது திறமையை அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் பயன்படுத்திக் கொள்வதும் பயிற்சியாளரின் பணிகளில் ஒன்று இல்லையா ? இல்லையெனில், எதற்கு சாப்பலுக்கு இவ்வளவு தண்டம் அழ வேண்டும் ? பாப் உல்மர், attitude சரியில்லாத ஷோயப் அக்தரை மாற்றி, அவரை சரியான வழியில் நடத்திச் சென்றதன் விளைவாக, இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் 2-0 டெஸ்ட் தொடர் வெற்றியில், அக்தர் பிரகாசிக்கவில்லையா ?

சமீபத்திய இந்திய வெற்றிகளுக்குப் பின், இப்போதுள்ள இந்திய அணியை, சாப்பலும் டிராவிட்டும் உருவாக்கியது போல ஒரு மாயை நிலவுகிறது. ஓரளவு அணிக்கு மெருகு கூடியிருக்கிறது என்பது மட்டுமே உண்மை. போகப் போகத் தான் பார்க்க வேண்டும்! கங்குலி சில தவறுகள் செய்திருக்கிறார். ஆனால், வீரேந்திர சேவாகை துவக்க ஆட்டக்காரராக பரிமளிக்க வைத்தது, யுவராஜையும், ஹர்பஜனையும் பல வாய்ப்புகள் தந்து அணியில் தக்க வைத்துக் கொண்டது, தோனியையும், கை·பையும் ஊக்குவித்தது என்று சில நல்ல விஷயங்களுக்கும் அவர் காரணமாக இருந்துள்ளார். அப்படிப்பட்டவரை, அவர் நீக்கப்பட்டவுடன், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைப்பக்கம் கூட எட்டிப் பார்க்காமல், சக ஆட்டக்காரர்கள் நிராகரித்தது வேதனையான ஒரு விஷயம் ! "நன்றி கெட்ட மாந்தரடா, கங்குலி அறிந்த பாடமடா!" (இப்பதிவின் தலைப்புக்கு காரணம் வேண்டும் அல்லவா !!!) என்று தான் சொல்ல வேண்டும் !

கங்குலிக்கு இப்போது எழுந்துள்ள ஆதரவை வைத்துப் பார்க்கும்போது, கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றால் கூட, மேற்கு வங்க அரசியலில் அவருக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவே தோன்றுகிறது :-) கங்குலியின் நீக்கம் குறித்து பாராளுமன்றத்தில் கூட விவாதம் நடக்க இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, December 04, 2005

வருணனுக்கு ஒரு திறந்த மடல் !

அன்பு (இல்) வருணா,

நலமா ? நாங்கள் நலமில்லை ! நீர் அனுப்பிய நீர் போட்ட ஆட்டத்தில், நார்மலாக கலகலப்பாக இருக்கும் ஐகாரஸ¤க்குக் கூட டிப்ரஷன் வந்து, உங்களுக்கு ஒரு லெட்டர் தட்டி விட்டுள்ளார்! பிரகாஷ் கூறியது போல், நான் கூட ஓரிரு தடவை, மழையில் மாட்டிக் கொண்டபோது, "சனியன் பிடித்த மழை" என்று கோபத்தில் உம்மைத் திட்டியிருக்கிறேன். அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா ? நானும் (என் பங்குக்கு) இந்த மடலை எழுதுவதற்குக் காரணம், பலர் சேர்ந்து எடுத்துரைத்தாலாவது, தமிழக மக்களுக்கு உம்மால் ஏற்பட்ட அவதியை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை தான் ! தைரியசாலியான டோண்டு ராகவன் கூட, தண்ணீர் புகுந்த தன் நங்கநல்லூர் வீட்டில் கலவரத்தில் இருக்கிறார் என்பது அவரது "மழை"ப் பதிவுகளில் தெரிகிறது !

கடந்த சில வருடங்களாக கோயில் கோயிலாக பூசை செய்தும், தமிழகம் பக்கம் எட்டிப் பார்க்காத தாங்கள், இவ்வருடம் முன்னதாகவே அழையாத விருந்தாளியாக வந்து, பொழிந்து தள்ளி விட்டதன் விளைவாக, தமிழ்நாடு அமிழ்நாடாகி விட்டது, சென்னை நீர் நிரம்பிய தொன்னை போல் காட்சியளிக்கிறது! ஏதோ வந்தோமா, ரெண்டு காட்டு காட்டினோமா, போனோமா என்றில்லாமல், இப்படி அழும்பு பண்ணினால் எப்படி ? உமது கைங்கர்யத்தால், இவ்வளவு நாள் பெயர் கேள்விப்படாத ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் நிரம்பி வழிவதை பார்க்கிறோம் !

சாலைகள் சீரழிந்து, பல கிராமங்கள் விழுங்கப்பட்டு, பயிர்களையும், உயிர்களையும் இழந்து, உங்களால் எம் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு உம்மைத் தொடவில்லையா ? நிலைமை ஓரளவு சீரடையவே பல மாதங்கள் ஆகும் என்று தோன்றுகிறது, பல கோடி செலவு செய்து பொருளாதாரத்தையும் சீரமைக்க வேண்டும். தொடர்ந்து, ககன்தீப் சிங் போன்ற நல்ல, திறமையான மாவட்ட ஆட்சியாளர்களையே நீர் பாடாய் படுத்துகிறீர்! அவர்களும் அயராது மக்கள் துயர் துடைக்க போராடி வருகின்றனர்.

நீர் அடித்த லூட்டியால், எப்போது போல, ஏழை மக்களும், நடுத்தர மக்களும் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி பரிதவிக்கின்றனர். எப்போது போல், அரசியல்வாதிகள், மழையால் ஏற்பட்ட மக்கள் பிரச்சினைகளை வைத்து, வரும் தேர்தலை எதிர் கொள்வதைப் பற்றி யோசித்து வருகின்றனர்! நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலாவது, ஆட்சியில் உள்ள அதிமுகவினரும், திமுகவினரும் இணைந்து செயல்படுவார்கள் என்ற உம் எண்ணத்தில் மண் தானே விழுந்தது ?!? ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்ற உமது பேராசையால், தற்போது, முப்பது நிமிடச் செய்திகளில், 27 நிமிடங்கள் தமிழகத்தில் உங்கள் கொட்டம் பற்றிய பேச்சு தான் ! வருண உபயத்தில், தமிழக வானிலை மையமும், அதன் இயக்குனரும் கூட ஊடக வெளிச்சத்தில் !

இந்த வாரத்தின் முதல் நான்கு நாட்கள் மழையின்றி சற்று உலரத் தொடங்கியிருந்த சென்னையில், சரியாக டெஸ்ட் மேட்ச் தொடங்கவிருக்கும் அன்று, Baaz-யை ஓர் உலுக்கு உலுக்கி, பேய் மழையை வரவழைத்து, கிரிக்கெட் ரசிகர்களை கடுப்படித்தீர்கள் ! உமக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் உள்ள பிரச்சினையில், எங்களை இப்படி அலைக்கழிக்கலாமா ? நீங்கள் ஹை பிரஷரில் பீடிக்கப்பட்டதாலோ என்னவோ, வங்கக் கடல் மேலே எந்நேரமும் லோ பிரஷர் !

திருப்பாவை நாச்சியார், "மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் (ரொம்பாவாய் அல்ல!)" என்று தானே உம்மை வேண்டினார் ? மாறாக, ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலேயே மக்களை தண்ணீரில் மூழ்கடித்து மூச்சுத் திணற வைத்து இப்படி பாடாய் படுத்தினால், மார்கழியில் நீராட தெம்பு வேண்டாமா ? "வாழ உலகினில் பெய்திடாய்" என்பதை "தாழ உலகினில் பெய்திடாய்" என்று புரிந்து கொள்ளுதல் முறையா ?

இறுதியாக, "துளித்துளி துளித்துளி மழைத்துளி, அது தொடத் தொட சிலிர்த்தது மலர்க்கொடி", "மழையே, மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா", "மழை வருது மழை வருது குடை கொண்டு வா, மானே உன் மாரப்பிலே", "பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம், நீயும் ஒத்துக்கிட்டு கூட வர வேணும்", "நீ வரும்போது நான் மறைவேனா" என்று அன்று முதல் இன்று வரை தொடர்ந்து எங்கள் திரைப்படங்களில் கதாநாயகிகளை மழையில் நனைய வைத்து, உம்மைக் குஷிப்படுத்தியதற்கு நீர் காட்டும் நன்றி விசுவாசம் இது தானா ?!?

என்னவோ போங்க, ஒண்ணும் சரியில்ல !

என்றென்றும் அன்புடன்
பாலா

பி.கு: எனக்கென்னவோ, தேவைக்கு அதிகமாக மழை பெய்து விட்ட நிலையில், வானிலை மையம் தினமும் (குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறதோ இல்லையோ!) "இன்று கனமழை பெய்யும், பலத்த காற்று வீசும்!" என்று சும்மாங்காட்டியும் அறிக்கை விட்டாலே, வருணன் தன் வேலையை நிறுத்திக் கொள்வார் என்று தோன்றுகிறது ! தற்போதைய சூழலில், வானிலை மையத்திடம் கேட்டுப் பார்த்தால், இதற்கு ஒப்புக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன் ;-)

சற்று சீரியஸாக, மழையால் பாதிக்கப்பட்ட ஏதாவது ஒரு கிராமத்திற்கு, நாம் கூட்டாக, ஒரு சிறிய அளவில் உதவி செய்யலாமே. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

Saturday, November 26, 2005

Dalmiya-வின் ஆடுகள அரசியல்

டால்மியாவும் அவரது அடிவருடிகளும் சேர்ந்து கொண்டு அரங்கேற்றிய அபத்த அரசியல் நாடகத்தின் விளைவாக, கல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நேற்று மண்ணைக் கவ்வ நேர்ந்தது. பொதுவாக, எந்தவொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும், இன்னொரு நாட்டு அணி தம் நாட்டில் விளையாட வரும்போது, தமது அணிக்கு சாதகமாக ஆடுகளங்கள் அமைப்பது, நடைமுறையில் காணப்படும் ஒன்றாகும்.

இதற்கு மாறாக, பிரபிர் முகர்ஜி என்ற திமிர் பிடித்தவரின் மூளை குழம்பியதின் விளைவாக, அவர் "SPORTING WICKET" என்ற பெயரில், KINGSMEAD-க்கு இணையான ஆடுகளம் ஒன்றை உருவாக்கியதற்கு, BCCI-யில் தற்போது நிலவி வரும் உட்பூசலும் ஒரு முக்கியக் காரணமாகும். பணம் கொடுத்து, பல மணி நேரம் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி, பலவித சிரமங்களுக்கிடையில் அரங்கிற்கு வரும் ரசிகர்களை ஏமாற்றிய, வெறுப்பேற்றிய இந்தக் கோமாளி பிரபிர் முகர்ஜியின் மேல் என்ன நடவடிக்கை எடுக்க இயலும் என்று தெரியவில்லை ?!?!

இதே போல், கடந்த வருடம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு, ஷரத் பவாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் விதர்பா கிரிக்கெட் சங்கம் , டால்மியாவைப் பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு, நாக்பூரில் பசுமையான ஆடுகளத்தை தயாரிக்க வைத்து, கிரிக்கெட் வீரர்களை (கிரிக்கெட்டையும்!) பலிகடாக்களாகவும், ரசிகர்களை முட்டாள்களாகவும் ஆக்கியது குறிப்பிட வேண்டியது. கிரிக்கெட் அரசியலில் "தாதா"வான கங்குலி கடைசி நிமிடத்தில் (உடல்நிலையை காரணம் காட்டி!) ஆட்டத்திலிருந்து விலகினார்! டிராவிட் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தோல்வி அடைந்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரையும் (பல வருட காத்திருப்பிக்குப் பின்!) கைப்பற்றியது.

ஏற்கனவே, கங்குலி ஒரு நாள் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப் படாததால் கடுப்பில் இருந்த, நேற்று மைதானத்திலிருந்த கங்குலி ரசிகர்கள் (வெறியர்கள்!) இந்தியா 71-5 என்று சரிந்தபோது, "டிராவிட் ஒழிக", "சாப்பல் ஒரு கழுதை", "சச்சின் ஹை ஹை" என்று (டால்மியாவும், முன்னாள் கேப்டனும் எதிர்பார்த்தது போலவே!) கூக்குரலிட்டனர்! பொதுவாக, நேற்று கொல்கத்தாவில், தென்னாப்பிரிக்காவுக்கு பலத்த ஆதரவு காணப்பட்டதில், கொல்கத்தா கிரிக்கெட் வெறியர்களைப் பற்றி அறிந்தவர்களுக்கு பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை!

கங்குலி டெஸ்ட் அணியில் "ஆல்ரவுண்டர்" (கிரன் மோரேயின் கூற்றின்படி!) என்ற போர்வையில் சேர்க்கப்பட்டுள்ளார். 33 வயதில், திடீரென்று அவர் எப்படி ஆல்ரவுண்டர் ஆனார் என்பது புரியாத புதிர்! அப்படியானால், கபில்தேவையும், ·பிளின்டா·வையும், இம்ரான் கானையும் என்னவென்று அழைப்பது ??? என்ன ஒரு கேலிக்கூத்து இது ? இதனால், சமீபத்திய உள்ளூர் ஆட்டங்களில் நன்றாக ஆடிய ஜகீர்கான் டெஸ்ட் அணியில் இடம் பெற முடியாமல் போனது.

அணிக்குள் பின்புறக் கதவு வழியாக பிரவேசித்திருக்கும் கங்குலி, ஏதாவது அரசியல் பண்ணி, அணியின் ஒற்றுமையைக் குலைத்து, டிராவிட்டுக்கு தலைவலி தர மாட்டார் என்று நம்புவோம்!!! அதற்கு, வரும் BCCI தேர்தல், டால்மியாவுக்கும், அவரது அடிவருடிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும். BCCI-யிலும் மாநில அளவிலும் முக்கியப் பதவிகளில் இருக்கும் சில அரசியல் தரகர்கள் நடத்தும் கேவலமான அரசியல் விளையாட்டிலிருந்தும், அதனால் ஏற்படும் அவல நிகழ்வுகளிலிருந்தும் கிரிக்கெட்டுக்கு என்று தான் விடிவு காலம் வருமோ ?! உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள், நேற்று நடந்தேறிய கூத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அடுத்து வரும் இரண்டொரு ஆட்டங்களை புறக்கணித்தாலாவது, BCCI திருந்துவதற்கு வழி பிறக்கலாம் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, November 21, 2005

கலாச்சாரக் கோவலர்கள் - உஷார்

குஷ்பு விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகக் குரலெழுப்பிய சுகாசினி "கலாச்சாரக் காவலர்களின்" பிரதிநிதிகளால் அலைக்ககழிக்கப்படுவதைத் தொடர்ந்து, குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியதாக, தற்போது, சானியா மிர்ஸாவும் சிக்கலில் மாட்டியுள்ளார். விசாகப்பட்டினத்திலிருந்து ஹைதரபாத் வரை, அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக் கொண்டு, ABVP (Akhil Bharathiya Vishwarthi Parishad) மற்றும் பெயரில்லா முல்லாக்களின் ஆதரவாளர்களும் (இம்மாதிரி விவகாரங்களில் இவர்கள் ஒரே மாதிரி சிந்திப்பதில் ஆச்சரியம் இல்லை!) பல இடங்களில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சானியா படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போட்டுக் கலக்கியதில், சானியா கலங்கிப் போய் பின் வாங்கி விட்டார்!!!

குஷ்பு கூறிய கருத்துக்கள் குறித்து பல பதிவுகள் வந்து விட்டன. இந்தியா டுடே கருத்துக் கணிப்பு குறித்த பேட்டியில் அவர் சொன்னவை இரண்டு விஷயங்கள். ஒன்று, திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ள முற்படும் பெண்கள் பாதுகாப்பான முறையை கை கொள்ள வேண்டும். மற்றொன்று, எந்த படித்த ஆணும் தனக்கு வரப்போகும் மனைவி "கற்புள்ளவளாக" (அதாவது, திருமணத்திற்கு முன் மற்றொரு ஆடவனுடன் பாலியல் உறவு கொள்ளாதவளாக) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். இவற்றை சில ஊடகங்களும், கலாச்சாரக் காவலர்களும் போட்டுக் (திரித்துக்) கலக்கியதில் தமிழகத்தில் குட்டை குழம்பி, சிலருக்கு மூளையும் குழம்பி விட்டது! இக்கருத்துக்களை எதிர்ப்பவர்கள், என்ன செய்திருக்க வேண்டும் ? திருமணத்திற்கு முன் ஒரு பெண் பாலியல் உறவு கொள்ளாமல் இருப்பதன் அவசியத்தையும் (உன்னதத்தையும்), ஓர் ஆண் 'கற்புள்ள' பெண்ணை மனையாளாகப் பெறுவதால் கிடைக்கும் பெரும் சிறப்பையும் மேடை போட்டு விளக்கியிருக்க வேண்டும் (அல்லது அவை குறித்து துண்டு பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்திருக்க வேண்டும்!) அல்லவா !?! மேற்கூறிய இரண்டையும், தமிழ் கலாச்சாரப்படி, ஆடவர்களுக்கு பொருத்திப் பார்க்கவே கூடாது !!! அவர்கள் சுதந்திரப் பறவைகள் !!!

"ஒருவனுக்கு ஒருத்தி" என்பது நம் தமிழ் கலாச்சாரமாகவே இருக்கட்டும்! நானும் இக்கருத்தை ஆதரிப்பவன் தான்! அதற்காக, சகிப்புத் தன்மை துளியும் இன்றி, செருப்பு, விளக்குமாறு, அழுகிய தக்காளி, முட்டை, கழுதையின் துணை கொண்டு, ஆர்ப்பாட்டமாக கண்டனம் தெரிவித்து, தனிமனித சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் இத்தகைய அராஜகப் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. முன்பொரு முறை, தேர்தலில் தோற்ற கலைஞர் அவர்கள், தமிழனை "சோற்றாலடித்த ஏதோ" ஒன்றாக
வர்ணித்திருந்தார். அப்போது, எங்கே போயிருந்தனர், இப்போது பயங்கரமாக எதிர்ப்பு தெரிவிக்கும், மான உணர்ச்சி மிக்க, இவர்களெல்லாம் ?

"திருமணத்திற்கு முன் உறவு" என்பது ஒருவருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் .... அதனால், ஒரு பெண் சமூகத்தில் சந்திக்க நேரிடும் சங்கடங்களுக்காகவும், அப்பெண்ணின் வாழ்க்கை திசை மாறிச் செல்லக்கூடிய ஆபத்திற்காகவும்! அத்தகைய நிலை ஏற்படாமல் இருப்பது, நன்னடத்தை கொண்டவராக பிள்ளைகளை (ஆண், பெண் ஆகிய இருபாலரையும்!) வளர்ப்பதும், குடும்பச் சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் மூலமாக பெருமளவு பெற்றோரின் கைகளிலும், ஓரளவு கல்வி அமைப்பிலும், ஆசிரியர் கைகளிலும் உள்ளது என்பது நிதர்சனம்.

இதைக் கூட புரிந்து கொள்ளாமல், யாரோ தூண்டி விட, இந்த "கலாச்சார மெய்க்காவலர்கள்" 'தையத்தக்கா' என்று குதிப்பதும், மாவட்டம் மாவட்டமாக வழக்கு போடுவதும் போன்ற கேலிக்கூத்து எதுவும் இல்லை. அதே நேரத்தில், சுகாசினி குஷ்புவுக்கு ஆதரவாக நிலை எடுத்ததோடு நில்லாமல், "ஒட்டு மொத்தத் தமிழர்களின் சார்பாக மன்னிப்பு கேட்பதாக" ஸ்டண்ட் அடித்திருக்க வேண்டாம். என் சார்பில் மன்னிப்பு கேட்க அவர் யார் என்பதற்காக இதைக் கூறவில்லை. குஷ்புவை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கையை விட அவர் கருத்தை வெளியிட அவருக்கு முழு உரிமை உண்டு என்று நம்புபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் !!! ஆனால், அவர்களில் பலர் 'நமக்கேன் வம்பு' என்று மௌனிகளாக இருக்கிறார்கள்.

இந்த வார ஆ.விகடனில் மூத்த பத்திரிகையாளர் ஞாநி சிந்திக்கத் தக்க வகையில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதே போல், சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சுதா ராமலிங்கம், 'மகளிர் உலகம்' என்ற அமைப்பைச் சேர்ந்த அம்மு ஜோசப், வசந்த் கண்ணபிரான், ரித்து மேனன் மற்றும் தேசிய மகளிர் கமிஷன் தலைவர் திருமதி கிரிஜா வியாஸ் ஆகியோர் இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகவே, அவர்களை ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இன்று, நிதியமைச்சர் ப.சிதம்பரமும், RSS-உம் (?) குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்கள்.

சுகாசினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருபவர்களில் ஒருவரான பேராசிரியர் தமிழண்ணல் கூறியிருப்பதைப் பாருங்கள்! "தமிழர்கள் மான உணர்ச்சியும், நாண உணர்ச்சியும் மிக்கவர்கள். இவற்றை இழந்தவர்கள் தான் உளறுவார்கள்" என்கிறார்! கண்டனம் தெரிவிக்கின்ற போர்வையில் ஒரு பெண்ணை இவ்வாறு இழிந்து பேசுவது மட்டும் சரியா ??? பேராசிரியர் பழனியப்பன், தமிழ் மக்களுக்கு கலவியை விட உடல் பெரிது, உயிர் பெரிது, மானம் பெரிது, தமிழும் மானமும் வேறு வேறு அல்ல என்று ஏதேதோ வசனம் பேசி விட்டு, சுகாசினி இவை குறித்து அறியாததற்குக் காரணம் அவர் "வந்த வழி அப்படி" என்கிறார்! பெரியார்தாசன் ஒரு படி மேலே போய், "மனிதர்களின் பிரதிநிதியாக ஆவதற்கு மாடுகளுக்கு தகுதியில்லை" என்று தனி நபர் தாக்குதலில் இறங்குகிறார். கல்வியாளர்களே இப்படி இருந்தால், பாமரனிடம் எப்படி சகிப்புத் தன்மையை எதிர்பார்க்க இயலும் ?!?!

லேட்டஸ்டாக, திருமா விஜயகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்! அதில், நடிகர் சங்க உறுப்பினரான குஷ்பு, சுகாசினி ஆகியோர் பொதுமக்களுக்கு 'எதிராக' கருத்து கூறியதாகவும், பொதுமக்களுக்கு 'விரோதமாக' செயல்படுவதாகவும், அவர்களை சங்கத்தை விட்டு நீக்க வேண்டும் எனவும், இல்லாத பட்சத்தில் தமிழ்நாடு சங்க சட்டப்படி, கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் கூறப்பட்டிருக்கிறது! என்னத்த சொல்ல ?!!?

குஷ்புவின் கருத்துக்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து, அவற்றை மிகத் தீவிரமாக எதிர்த்த கலாச்சாரக் காவலர்களின் செயல்களினால், அரசியல் களத்தில் குஷ்பு ஒரு Worthy Adversary என்ற பிம்பம் மக்களிடையே உருவாகி வருவதன் விளைவாக, பிற்காலத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு வடநாட்டுப் பெண்மணி முதலமைச்சராக வரக் கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது :)

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான, துளியும் சகிப்புத்தன்மை அற்ற, இப்போக்கை கண்டித்து, கருத்துச் சுதந்திரத்தின் பால் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் (ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ...)இப்போது வாயைத் திறக்க விட்டால், கலாச்சாரக் கோவலர்களின் அனுமதியின்றி, பிறகு எப்போதும் வாயைத் திறக்க இயலாத ஓர் அவலமான சூழல் எதிர்காலத்தில் உருவாகி விடும் அபாயம் உள்ளது. தனிமனித கருத்துச் சுதந்திரத்தை கேள்விக் குறியாக்கும் இத்தகைய போக்கு குறித்து, தற்போது நீதிமன்றங்களில் இவ்விவகாரம் தொடர்பாக அனுமதிக்கப்பட்டிருக்கும் பல வழக்குகளின் விசாரணை மற்றும் தீர்ப்பு வாயிலாக, நீதியரசர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நன்றி: தமிழ் முரசு, குமுதம் ரிப்போர்ட்டர்

நினைவூட்டல்: இப்பதிவைப் படிக்கும் வாசக நண்பர்கள் மறக்காமல், (பின்னூட்டுவதற்கு விருப்பமின்மையோ, நேரமின்மையோ காரணமாக இருந்தாலும்!) தயவு செய்து, தங்கள் ஆதரவையோ எதிர்ப்பையோ +/- வாக்கு வாயிலாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் !!!

Friday, November 11, 2005

தினமலரும் என் வலைப்பதிவும்!

கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு முன் அனானி நண்பர் ஒருவர் என் பதிவின் பின்னூட்டத்தில் என் வலைப்பதிவு பற்றி தினமலரில் குறிப்பு வந்திருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், உரலை அவர் குறிப்பிடாததால், அதை விட்டு விட்டேன். இப்போது சற்று பிரயத்தனப்பட்டு, தினமலர் வலைத்தளத்தில் தேடி அக்குறிப்பு அக்டோபர் 16ஆம் தேதி வந்துள்ளதை அறிந்து கொண்டேன். மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு !!! அவ்வுரல் கீழே:

http://dinamalar.com/2005oct16/flash.asp



தினமலருக்கு (தமிழ்மணத்திற்கும், அதன் வாயிலாக எனக்குக் கிட்டிய வாசக நண்பர்களுக்கும் கூடத் தான்!) என் நன்றி !

என்றென்றும் அன்புடன்
பாலா

*169*

Saturday, October 22, 2005

தமிழ்மணமும் ...

தமிழ்மணத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளை விலக்கியது சரியானதா என்று பலர் தத்தம் கருத்துக்களை முன் வைத்துள்ளனர். சில கருத்துக்களை சக வலைப்பதிவருடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியதன் விளைவே இப்பதிவு!

1. ஒருவர் தன் பதிவில் முன் வைக்கும் கருத்துக்களுக்கு, சிலருக்கோ / பலருக்கோ மாற்றுக் கருத்துக்கள் இருக்கும். அவற்றை, நாகரீகமான வகையில், சம்மந்தப்பட்ட பதிவின் பின்னூட்டக் களத்திலோ அல்லது தனிப்பதிவாகவோ இட மற்றவருக்கு நிச்சயம் உரிமை உண்டு. ஆனால், ஒருவரைப் பற்றிய இரங்கல் பதிவையும், அதில் இடப்பட்ட பின்னூட்டங்களையும் பகடி செய்வது சரியான செயலாகத் தோன்றவில்லை. மதி தமிழ்மணத்திற்கு செய்து வரும் சேவை மற்றும் அவரது எழுத்துக்களை முன் வைத்து அவருக்கென்று ஒரு வாசகர் வட்டம் உள்ளது. அதனால் அவரது பதிவுகள் அதிக அளவில் வாசிக்கப்பட்டும், பின்னூட்டங்கள் பெற்றும் வருகின்றன. இதில் பகடி செய்வதற்கு என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை!

2. சில சமயங்களில், பகடியை மாற்றுக் கருத்துக்களை வெளியிட ஒரு ஆரோக்கியமான வழியாகப் பயன்படுத்துவதில் தவறில்லை. அதைப் பலரும் ரசிக்கவே செய்கின்றனர். அதே நேரத்தில், வலைப்பதிவுக் களத்தை பிறரை பகடி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவது, பல நேரங்களில் காழ்ப்பை வளர்ப்பதற்கு மட்டுமே அடி கோலுவதாய் அமைந்து விடுகிறது.

3. காசி தமிழ்மணச் சேவையின் முதலாண்டு நிறைவின் போது இட்ட பதிவிலேயே மதத்துவேஷம் மற்றும் இன்னபிற விரும்பத்தகாத விடயங்களைத் தாங்கி வரும் பதிவுகளை விலக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறியிருந்தார். அந்த நிலைக்குத் தன்னை தள்ள வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனால், தொடர்ந்து அவ்வாறே எழுதி வருபவர்கள் தங்கள் பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படக் கூடிய சாத்தியம் இருந்ததை உணர்ந்திருக்க வேண்டும்.

4. பலருக்கு, பணி, குடும்பம் ஆகியவற்றுக்கே நேரம் போதாமல் இருக்கும் சூழலில், தனியொரு மனிதனாக, தமிழ் வலைப்பதிவுகளை ஒருங்கிணைக்க தமிழ்மணத்தை உருவாக்கிய காசியின் சேவை மனப்பாங்கையும், உழைப்பையும் மனதில் கொண்டாவது, இம்மாதிரி பொதுவில் அவருக்கு கசையடிகள் வழங்குவதை தவிர்க்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து! "நாங்கள் என்ன, தமிழ்மணத்தை உருவாக்க பொருளுதவி கேட்டிருந்தால் தந்திருக்க மாட்டோமா?" என்று வினாவெழுப்புவது சற்றும் சரியல்ல! பொருளுதவி கொடுத்தாலும், ஒருவர் அதில் முனைய வேண்டாமா ?

5. தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்ட வலைப்பதிவுகளுக்குச் சொந்தக்காரர்கள், விடயத்தை பொதுவில் வைப்பதற்கு முன், தனிப்பட்ட முறையில் காசியை அணுகி, காரணங்களைக் கேட்டு, சர்ச்சைக்குரிய பதிவுகளை தாமாகவே நீக்க முன் வந்திருந்தால், பிரச்சினையை சுமுகமான முடிவுக்கு எடுத்து வந்திருக்கக் கூடிய சாத்தியம் இருந்ததாகவேத் தோன்றுகிறது. ஒரு விதயத்தை ஊதிப் பெரிதாக்குவது என்பது இங்கு நடைமுறையாகவே இருந்து வருகிறது!

6. இதைத் தணிக்கை என்று எண்ணுவதை விட, சக வலைப்பதிவரின் மனம் புண்படும்படியும், தேவையற்ற சர்ச்சையை வளர்க்கும் வகையிலும் எழுதாமல் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதாக நினைத்தால், அனைவருக்கும் நல்லது. முக்கியமாக, சின்னவன், இணையக்குசும்பன் பதிவுகள் நீக்கப்பட வேண்டிய சூழல் உருவானது குறித்து இங்கே யாருக்கும் மகிழ்ச்சி இல்லை!!! பதிவுகள் விலக்கப்பட வேண்டிய காரணங்களை ஆராயும் வழிவகைகள் குறித்து என் கருத்துக்களை முன் வைப்பதை, தற்போதைய சூழலில், தவிர்க்கிறேன்!

7. இறுதியாக, தமிழ்மணம் வாயிலாகத் தான், பல சாதாரணர்களின் (என்னையும் சேர்த்து) பதிவுகள் கவனிக்கப் படுகின்றன, வாசிக்கப் படுகின்றன என்பதை பலரும் ஒப்புக் கொள்வர். ஏன், தமிழ்மணம் மூலமாகத் தான் கௌசல்யா என்ற ஏழை மாணவியின் கல்விக்கு (சக வலைப்பதிவரின் ஆதரவோடு) உதவ வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தின் முதல் கட்டம் நிறைவேறியது!

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, October 12, 2005

சென்னைப் பெருமழையும் நெகிழ்ச்சியானதொரு சந்திப்பும்

எனது பிரமிக்க வைக்கும் கௌசல்யா பதிவின் இறுதியில் வைக்கப்பட்டிருந்த (கௌசல்யாவின் மருத்துவக்கல்வி உதவிக்கான) கோரிக்கையைத் தொடர்ந்து பல வலைப்பதிவு நண்பர்கள் பணவுதவி செய்தனர். கிட்டத்தட்ட 30,000க்கு மேலான ஒரு தொகை திரண்டது. அதிலிருந்து ரூபாய் இருபத்தைந்து ஆயிரத்தை கௌசல்யாவிடம் சேர்ப்பிக்கவும், மீதித் தொகையை மற்றொரு ஏழை மாணவிக்குத் தரவும் நண்பர்களின் ஒப்புதலுடன் முடிவெடுக்கப்பட்டது.

கௌசல்யா குறித்து முதலில் செய்தி வெளியிட்ட DECCAN CHRONICLE(DC) அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, அந்த நாளிதழின் Chief of News Bureau, பகவன் சிங் அவர்களிடம் கௌசல்யாவை சந்தித்துப் பேசவும், திரட்டியத் தொகையை வழங்கவும் ஏற்பாடு செய்யுமாறு விண்ணப்பித்தேன். சற்று நீண்ட காத்திருப்பிற்குப் பின் பகவன் அவர்கள் அந்தச் சந்திப்பை இன்று மதியம் 3 மணி அளவில் ஏற்பாடு செய்திருந்தார். சரியான மழை நாளில் அது அமைந்து விட்டது! திரு.டோண்டு ராகவனையும், ரஜினி ராம்கியையும் DC அலுவலக சந்திப்புக்கு வருமாறு அழைத்திருந்தேன்.

வீட்டிலிருந்து கிளம்பும்போது ஓரளவு மழை பெய்து கொண்டிருந்தது. என் மனைவிக்கு நங்கநல்லூர் செல்ல வேண்டிய வேலை இருந்ததால், கால் டேக்ஸி எடுத்துக் கொண்டு, போகும் வழியில் கத்திப்பாரா சந்திப்பில் என்னை இறக்கி விட்டுப் போகுமாறு கூறினேன். கத்திப்பாராவை நெருங்கும்போது வானம் மடை திறந்தாற் போல் மழை பெய்யத் தொடங்கியது! ஒழுங்கு மரியாதையாக DC அலுவலக வாசலில் இறங்கிக் கொள்ளாமல், "நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கிளம்பு!" என்று (DC அலுவலகம் அருகில் இருப்பதாக எண்ணிக் கொண்டு) மனைவியிடம் ஜவடாலாகக் கூறிவிட்டு கத்திப்பாராவில் இறங்கி விட்டேன்!

நூறடி சாலையில் மழைக்கு ஒதுங்கக் கூட இடமில்லாமல், சுமார் ஒன்றரை கி.மீ நடந்து DC அலுவலகம் போய்ச் சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது! அதுவும் DC அலுவலகம் அமைந்த தெரு, முழுதும் சேறும் சகதியுமாக இருந்தது! அலுவலகம் உள்ளே சென்றவுடன், உள்ளுக்கும் வெளிக்கும் ஆன சூழல்களில் இருந்த வித்தியாசம், முகத்தில் அறைந்து வரவேற்றது!!! அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கட்டடம் அது!

பகவன் சிங் அவர்களின் அறையில் அவருக்காகக் காத்திருந்தபோது டோண்டு ராகவன் வந்து சேர்ந்தார். ராம்கியால் வர இயலவில்லை. பகவன் சிறிது நேரத்தில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மனிதர் மிக எளிமையாகவும், நட்பு பாராட்டுபவராகவும் இருந்தார். அவர் பெயர் வடக்கத்தித்தனமாக இருந்தாலும் பகவன் நல்ல தமிழில் பேசியது மனநிறைவாக இருந்தது. மழை காரணமாக கௌசல்யா வந்து சேர சற்று தாமதம் ஆனது. நானும், ராகவனும், பகவன் அவர்களும் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

தமிழ் வலைப்பதிவுகள், தமிழில் பதிக்கத் தேவையான மென்பொருட்கள், தமிழ்மணம் சேவை ஆகியவை குறித்து பகவன் அவர்களிடம் எடுத்துக் கூறினோம். அவற்றை பொறுமையாகக் கேட்டுக் கொண்ட அவருக்கு, தமிழ்மணம் வெப்சைட்டை அவரது கணினியில் திறந்து காண்பித்தேன். பகவன் தன் கீழே பணி புரியும் பத்திரிகையாளர் ஒருவரை அழைத்து தமிழ் வலைப்பதிவுகள் குறித்து கட்டுரை ஒன்றை தயாரித்து DCயில் வெளியிட ஆவன செய்யுமாறு கூறினார்! அதற்கு வேண்டிய உதவி செய்யுமாறு எங்களையும் கேட்டுக் கொண்டார்.

தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் கூறியபடி, நாங்கள் பேசுவதையும் செவிமடுத்தபடி, கணினியில் ஒரு கட்டுரையை தட்டச்சும் செயதபடி, சக பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியபடி, (இவற்றுக்கு இடையில் எங்களுக்கு காபி வரவழைத்துத் தந்து!) பகவன் சிங் இயங்கியதைக் காண சற்று பிரமிப்பாகவே இருந்தது!!!

ஒரு வழியாக கௌசல்யா DC அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார். அவரை சந்தித்து நானும் ராகவனும் பேசினோம். First Impression is always the Best Impression என்பதற்கு ஏற்றாற் போல நற்குணமும் கல்வியார்வமும் மிக்கவராக கௌசல்யா தோற்றமளித்தார்! 12-வது வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல் (199/200) தவிர கணிதம், வேதியியல், உயிரியல் பாடங்களில் 200/200 வாங்கிய, பொது நுழைவுத் தேர்வில் 98.33% பெற்ற, தாய் தந்தையற்ற அப்பெண்ணுக்கு, நமது தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் உதவ முடிந்தது குறித்து மிகுந்த மனநிறைவு எனக்கு! அத்தகைய மதிப்பெண்கள் பெற எத்தகைய அசாதாரண உழைப்பு தேவை என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

ஒரு வருடத்திற்கு படிப்பு மற்றும் இதரச் செலவுகளுக்கு சுமார் 40000/- தேவையிருப்பதாகக் கௌசல்யா கூறினார். ரூபாய் 25000-க்கான காசோலையை அவரிடம் கொடுத்து, அடுத்த வருடமும் அவரது படிப்புக்கு இயன்ற அளவு உதவி செய்ய முயற்சிப்பதாகக் கூறி விடை பெற்றோம். DC பத்திரிகை சார்பிலும் கௌசல்யாவுக்கு உதவி அளிக்கப்படுவதாக அறிந்தேன்.

பின்னர், DC அலுவலக வாசலிலிருந்து நூறடி சாலை வரை தேங்கியிருந்த குட்டையில் (செருப்பை கையில் பிடித்துக் கொண்டு!) நீந்தியபடி நானும் ராகவனும் ஒரு வழியாக கிண்டியை அடைந்தோம்! மழை பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது! சொட்ட சொட்ட மழையில் நனைவது கூட, உள்ளம் நிறைவாக இருக்கும்போது, மிகுந்த ஆனந்தமாகவே உள்ளது!!!

உதவிய நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! கௌசல்யாவின் மருத்துவப் படிப்பு முடியும் வரை, அவருக்கு (இயன்ற அளவில்) உதவலாம் என்பது என் எண்ணம். அதற்கு உங்கள் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, September 22, 2005

BCCI கலாட்டா !

நடக்கவிருக்கும் BCCI பதவிகளுக்கான "ஜனநாயக" போட்டி குறித்தும், அது சம்மந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் குறித்தும், சம்மந்தப்பட்டவர்களின் அறிக்கைகள் குறித்தும், ஊடகங்கள் இந்த விடயத்தை ஊதிப் பெரிதாக்குவது குறித்தும் தொடர்பாக நடந்தேறி வரும் கூத்துகள் பொதுவாக ரசிக்கும்படியாக இருந்தாலும், இவற்றிலிருந்து ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது!

டால்மியா, IS.பிந்த்ரா, பவார், ·பரூக் அப்துல்லா, துங்காப்பூர், மகேந்திரா மற்றும் அவர்களுக்கிடையே நடக்கும் power struggle-ஐ வரிந்து கட்டி பதிவு செய்யும் ஊடகவியலாளர்கள் ஆகிய யாருமே பெரிய யோக்கிய சிகாமணிகள் கிடையாது. அவரவருக்கு இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் / கிடைக்கப்போகும் ஆதாயமே பிரதானம் !

இவற்றையெல்லாம், ஈ போவது தெரியாமல் வாயைப் பிளந்து 'ஆ'வென்று பார்த்துக் கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் தான் சூப்பர் கோமாளிகள்! இவர்கள் இப்போதைக்கு திருந்தப் போவதும் இல்லை! உடனே பாயாதீர்கள்! என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன் :-)

என்றென்றும் அன்புடன்
பாலா

*165*

Wednesday, September 21, 2005

'சுயநலக் கபடதாரி' Sourav Ganguly

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் அணி ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு யோசனையாக (கங்குலி தலைமைப் பதவியிலிருந்து விலகலாம்) முன் வைத்த ஒரு விடயத்தை ஊடகங்களில் சமயம் பார்த்து (தான் சதம் அடித்த அன்று) கசிய விட்டு, கங்குலி செய்த மட்டமான அரசியல், அவரது சுயநலத்தையும், பல நாட்களாக அவர் அரங்கேற்றி வந்த "அணி ஒற்றுமை" நாடகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.

நடந்தேறியுள்ள இந்த கசப்பான நிகழ்வினால், ராகுல் டிராவிடின் பக்குவமும், உயர்ந்த குணமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்திற்கு முன் நடைபெற்ற இந்த அணி ஆலோசனைக் கூட்டத்தில், டிராவிட் தன் கேப்டனுக்கு ஆதரவாக நின்றது, அவர் எத்தகைய Team man என்பதையும் பறைசாற்றுகிறது! அதே நேரம், சென்னையிலுள்ள ஒரு முதல் டிவிஷன் கிளப் அணிக்கு ஒப்பான ஜிம்பாப்வே அணிக்கு எதிராக, ஓர் இலகுவான ஆடுகளத்தில், 262 பந்துகளை விழுங்கி கங்குலி எடுத்த சதமே, அவரது ஹிமாலய சுயநலத்திற்கு சான்று !!!

இந்த விடயம் பூதாகரமாக உருவெடுக்காததற்கு முக்கியக் காரணம், பத்திரிகையாளர்களை சந்தித்த சாப்பல் தன் பங்குக்கு கங்குலிக்கு எதிராக எதையும் கூறாதது தான். மேற்கு வங்காளத்தில் தனக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தையும், ஆர்ப்பாட்டமான ஆதரவையும் கண்டு, கங்குலி தன்னை உண்மையிலேயே ஒரு மகாராஜாவாக கற்பனை செய்து கொள்வதால் விளைந்த அகந்தையும், ஆணவமும் தான், கங்குலியின் இத்தகைய செயல்பாடுகளுக்கு ஆதாரமானவை! BCCI-ஐ ஒரு மா·பியா கூட்டம் போல் ஆக்கிய டால்மியாவின் ஆதரவும், கங்குலி மீண்டும் கேப்டன் பதவியைப் பெற பெரிதும் உதவியது!

2007-இல் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை போட்டிக்கு ஒரு பலமான இந்திய அணியை உருவாக்குவதற்கு (கங்குலி கேப்டனாக இருப்பதை காட்டிலும்!) சாப்பல் அணியின் பயிற்சியாளராக நீடிக்க வேண்டியதன் அவசியத்தை பலரும் ஒப்புக் கொள்வர். இதுவரை தான் ஈட்டிய (ஓரளவு) பேருக்கும், புகழுக்கும் பங்கம் ஏற்படாமல் இருக்கவும், அணியின் நலன் கருதியும், தலைமைப் பொறுப்பிலிருந்து தானே விலக முடிவெடுப்பது தான் கங்குலிக்கு சிறந்தது, நல்லது. ஆனால், அவரது இயல்பு அதை அனுமதிக்காது!

ஒரு கேப்டனாக / மட்டையாளராக இந்திய கிரிக்கெட்டில் கங்குலிக்கான இடத்தை யாரும் மறுக்க முடியாது. அதே சமயத்தில், அவர் தன் கிரிக்கெட் வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் உள்ளார் என்பதும் கண்கூடு! வரவிருக்கும் 2007- உலகக்கோப்பையை மனதில் கொண்டு, டிராவிட்டை கேப்டனாகக் கொண்ட ஒரு சிறந்த அணியை உருவாக்குவதே, தற்போது BCCI-யின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*164*

Tuesday, September 20, 2005

SELF CENTRED கோலிவுட் கதாநாயகர்கள்

தமிழோவியத்தில் பதிப்பிக்கப்பட்டது

கடந்த 15 வருடங்களைத் தவிர்த்து தமிழ்த் திரையுலகில் பிரபலமான கதாநாயகர்கள் இணைந்து நடிப்பதென்பது இயல்பான ஒன்றாகவே இருந்தது. இதில் எம்ஜியாரையும் சிவாஜியையும் விட்டு விடலாம் !

கமலும் ரஜினியும் இணைந்து பல நல்ல திரைப்படங்களில் நடித்தனர். நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, மூன்று முடிச்சு, அவர்கள் என்று பல திரைப்படங்களை சுட்டிக் காட்டலாம். இம்மாதிரி இரு வித்தியாசமான நடிகர்கள் இணைவது சாத்தியப்படும்போது, கதாசிரியர் நல்ல கதைக்களனை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது.

தற்போது வெளிவரும் பல திரைப்படங்கள், அவற்றில் நடிக்கும் கதாநாயகருக்காக உருவாக்கப்பட்டு, நாலு பாட்டு, நாலு ·பைட், ஒரு அயிட்டம் டான்ஸ் (வட இந்திய இறக்குமதி பெரும்பாலும்!), வெறுப்பேத்தும் நகைச்சுவை, அலுப்பூட்டும் வில்லத்தனம் என்கிற கட்டுக்குள் அடங்கி விடுகிறது. இத்தகைய சூழலில், நல்ல கதையம்சம் இல்லாத படங்களில் உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்க ஏது வாய்ப்பு ? சங்கர், பாலா (என்றென்றும் அன்புடன் அல்ல!), மணிரத்னம் போன்ற இயக்குனர்களிடமிருந்து வித்தியாசமான கதையுடன் கூடிய நல்ல படங்கள், சில சமயம் நமக்குக் கிடைக்கின்றன.

அக்காலத்தில், பிரபல நாயகர்கள் இணைந்து நடிக்க வேண்டியிருந்தது கண்டு அஞ்சாமல், போட்டி போட்டு நடித்து அவரவர் முத்திரையை பதித்தனர். ஆரோக்கியமான போட்டி இருந்தது. ஆனால், ஈகோ அவ்வளவாக இல்லை எனக் கூறலாம். இப்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து விட்டால் (அதில் ஒன்று சுமாராக ஓடியும் விட்டால்!) அந்த நடிகர் யாருடனும் சேர்ந்து நடிக்க மாட்டார் !!! அவருக்கேத்த கதையை உற்பத்தி செய்ய வல்ல இயக்குனருக்காக அலைய ஆரம்பிப்பார் !

உதாரணத்துக்கு, சிம்புவையும், தனுஷையும் (அல்லது விஜயையும், அஜித்தையும்) எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் இணைந்து நடிப்பதென்பது சாத்தியமே இல்லாத ஒன்றல்லவா ? வித்தியாசமான நடிகர்கள் இணையும்போது, நல்லதோர் கதைக்களன் அமைவதும், நல்ல திரைப்படங்கள் வெளிவருவதும் சாத்தியமாகின்றன. இப்போதிருக்கும் நாயகர்கள் தனித்தனி தீவுகளாக உலா வருகிறார்கள். அதனாலேயே, அவர்களிடமிருந்து ஒரே மாதிரியான (STEREOTYPE) படங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியும் !

ரஜினியும் சிவகுமாரும் சேர்ந்ததால் தான், 'புவனா ஒரு கேள்விக்குறி' என்ற வித்தியாசமான திரைப்படம் கிடைத்தது ! கமலும் ரஜினியும் இணைந்ததால் தான், ஒரு 'அவர்கள்' உருவானது ! சிவாஜியும் கமலும் சேர்ந்ததால், ஒரு 'தேவர் மகன்', சிவாஜியும் ஜெமினியும் இணைந்ததால் ஒரு 'பாசமலர்', முத்துராமனும் ரவிச்சந்திரனும் இணைந்ததால் ஒரு 'காதலிக்க நேரமில்லை', கார்த்திக்கும் பிரபுவும் சேர்ந்ததால் ஒரு 'அக்னி நட்சத்திரம்' என்று பலவற்றைக் கூறலாம் !

அப்போதெல்லாம் சிவாஜி, SSR, பாலாஜி, ஜெமினி, முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், சிவகுமார் என பலரும் ஒருவருடன் ஒருவர் இணைந்து பல தரமான படங்களை தந்துள்ளனர். அதோடு இக்காலத்தில், ரங்காராவ், சுப்பையா, நாகையா, பாலையா, மேஜர் சுந்தரராஜன், நாகேஷ் போல குணச்சித்திர நடிப்பில் தனித்துவத்தோடு பரிமளிக்கும் நடிகர்கள் ஓரிருவரே உள்ளனர் என்பதும் பெருங்குறையே !!!

ஹிந்தி திரைப்படங்களில் பிரபல நடிகர்கள் சேர்ந்து நடிப்பது ஒரு சாதாரண நிகழ்வாகவே இருந்து வந்திருக்கிறது. இதற்கு இரு காரணங்களைக் கூறலாம். ஒன்று, இயக்குனர்களுக்கு அங்கு நல்ல மதிப்பு எப்போதும் உள்ளது. இரண்டு, பாலிவுட் நடிகர்கள் தங்களை தனித் தீவுகளாக எண்ணிக் கொள்வதில்லை. அந்தக்கால ராஜ்கபூர், ராஜேந்திரகுமார், சுனில்தத், திலீப்குமார், பால்ராஜ் சஹானி, கிஷோர்குமார் முதல், அடுத்து வந்த சஞ்சீவ்குமார், தர்மேந்திரா, அமிதாப், ராஜேஷ்கன்னா, வினோத்கன்னா, சசிகபூர் ஆகியோரும், அதன் பின்னர் வந்த ரிஷிகபூர், அனில்கபூர், ஜாக்கிஷ்ரா·ப், நசுருதீன் ஷா, நானாபடேகர், சன்னிதியோல், சஞ்சய்தத் ஆகியோரும், தொடர்ந்து வந்த அமீர்கான், சல்மான்கான், ஷாருக், அக்ஷய்குமார், அஜய் தேவ்கன் ஆகியோரும், இன்றைய இளம் நாயகர்களான பாபிதியோல், ரித்திக்ரோஷன், விவேக்ஓபராய் வரை, அந்தந்த கால கட்டங்களில் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்கள் வெளி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் ரஜினியை விடுத்து, சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விக்ரம், அர்ஜுன், விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த், சிம்பு, தனுஷ் என்று பலரும் இணைந்து நடிக்கத்தக்க சூழலை வரவேற்க வேண்டும், உருவாக்க வேண்டும் ! இல்லையென்றால், கிராமத்து 'ஐயா' சரத்குமார், அனல் வசன 'கேப்டன்' விஜயகாந்த், கோபக்கார அஜித், காதலில் மென்மையும், சண்டையில் ஆண்மையும் காட்டும் விஜய், அடிதடி அர்ஜுன், நக்கல்/காமெடி சத்யராஜ், எகத்தாள சிம்பு, பரிதாப தனுஷ் நடிக்கும் படங்களைப் பார்த்து அலுத்து நம் வாழ்க்கை முடிந்து விடும் ! தமிழ்த் திரைப்படச் சூழலிலும் முன்னேற்றம் ஏற்படாது !

இப்போதைய நடிகர்களில், விக்ரம், கமல் மட்டுமே வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு தங்கள் நடிப்பால் மெருகூட்ட சிரத்தை எடுக்கின்றனர். யோசித்துப் பார்த்தால், ஒரு இந்தியனும், ஒரு சேதுவும், ஒரு அன்பே சிவமும், ஒரு பிதாமகனும் கோலிவுட்டில் எடுக்கப்பட்டவை தான் !!! என்ன, இவற்றுக்கு இடையில் தயாரிக்கப்படும் குப்பைகள் ஏராளம் !!! அது தான் பிரச்சினையே !

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, September 19, 2005

ஒரே கேள்வி --- ஒரே பதில்

கேள்வி: அரசியல், சினிமா இவ்விரு துறைகளிலும் வாரிசுகள் ஆதிக்கம் செலுத்துவதைப் போல் இலக்கியத் துறையில் இவ்வித ஆதிக்கம் காணப்படவில்லையே, ஏன் ?

--- அ.அப்துல் காதர், விளாத்திகுளம்

மதனின் பதில்: அரசியல் வாரிசுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை. வெறுமனே வாரிசாகப் பிறந்தாலே போதும் ! சினிமாவில் கொஞ்சூண்டு நடிப்பு, டான்ஸ், சண்டைப் பயிற்சி மட்டுமே தேவைப்படும். பிறகு அப்பாவே மகனை நடிக்க வைத்து ஒரு மாதிரி ஒப்பேத்தி விடுவார் ! இலக்கியத்தில் இது எதுவுமே நடக்காது. யாருமே உங்களுக்கு உதவ முடியாது. சுருக்கமாக, இலக்கியத்துக்கு சுயமாகக் கற்பனை செய்தே தீர வேண்டும்.

டென்ஷனைக் குறைக்க ஒரு ஜோக் :)

பெண் 1: சாட்டிங் மூலமா ஏமாத்திப் பணம் பறிக்கலாம்னு பார்த்தா, அவன் பயங்கர கில்லாடியா இருப்பான் போலிருக்கு!

பெண் 2: எப்படிச் சொக்றே ?

பெண் 1: என் படம்னு ஜோதிகா படத்தை அனுப்பி ஏமாத்த நினைச்சேன் ... அவன் சூர்யா படத்தை அனுப்பறான் !

--- இலவை ஜோகா

நன்றி: ஆனந்த விகடன்

*162*

Thursday, September 15, 2005

கார்ப்பரேட் மேலாண்மைப் பாடங்கள்

பாடம் - 1
**************

ஒரு காகம் ஒரு மரத்தின் கிளையில், ஒரு வேலையும் செய்யாமல் அமர்ந்திருந்தது. அந்த வழியாக வந்த சிறுமுயல் ஒன்று காகத்தைப் பார்த்து, "நானும் உன்னைப் போலவே ஒரு வேலையும் செய்யாமல் ஒய்வெடுக்கலாமா ?" என்றது, அதற்கு காகம், "ஓ, தாராளமாகச் செய்யலாமே !" என்று பதிலுரைத்தது ! சிறுமுயலும் மரத்தின் கீழ் அமர்ந்து ஓய்வெடுக்கத் தொடங்கியது. அங்கு திடீரென்று தோன்றிய நரி, முயல் மீது பாய்ந்து அதை கொன்று தின்று விட்டது !!!

Image hosted by Photobucket.com

நீதி: ஒரு வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டுமென்றால், நீங்கள் மிக உயரத்தில் அமர்ந்திருத்தலே நலம் !!!




பாடம் - 2
**************

ஒரு கோழியும், எருதும் உரையாடிக் கொண்டிருந்தன.

கோழி: எனக்கு அந்த மரத்தின் உச்சிக்கு செல்ல ஆசை. ஆனால், அதற்கு வேண்டிய உடற்திடம் என்னிடம் இல்லை !
எருது: என்னுடைய சாணத்தை கொஞ்சம் தின்று பார் ! ஏனெனில், அதில் பல சத்துக்கள் உள்ளன.

Image hosted by Photobucket.com

முதல் நாள் கொஞ்சம் சாணத்தை உண்ட கோழிக்கு மரத்தின் முதல் கிளை வரை ஏற முடிந்தது. அடுத்த நாள் கோழி இன்னும் சிறிது சாணம் தின்று இரண்டாவது கிளை வரை ஏறியது. இது போல் சிறிது சிறிதாக சாணம் தின்று, பத்து நாட்களில், கோழி மரத்தின் உச்சிக்கு ஏறி, மிக்க பெருமையுடன் அமர்ந்திருந்தது !!! அந்த வழியாக வந்த குடியானவன் ஒருவன், மரத்தின் உச்சியில் இருந்த கோழியைக் கண்டவுடன், உணவுக்காக அதை சுட்டு வீழ்த்தினான் !!!

Image hosted by Photobucket.com

நீதி: எருதுச்சாணம் (BULLSHIT) உங்களை உயரத்திற்கு இட்டுச் செல்லலாம் ! ஆனால், உயரத்திலேயே நிலை கொள்வதற்கு அது ஒருபோதும் உதவாது !!!


"உயரத்திற்குச் செல்ல விரும்பாத"
என்றென்றும் அன்புடன்
பாலா




Wednesday, September 14, 2005

கேப்டன் VS கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கங்குலி மற்றும் இன்று புதுக் கட்சி (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) தொடங்கிய "கேப்டன்" விஜயகாந்த் ஆகிய இருவரை குறித்து ஓர் ஒப்பு நோக்கு பார்வை :-)
********************************

1. கங்குலி தனது இன்னிங்க்ஸை 9 வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் (முதல் ஆட்டத்திலேயே சதத்துடன்) தொடங்கினார். தற்போது அது முடிவடையும் நிலையில் உள்ளது போல் தெரிகிறது !!! நமது கேப்டன் தனது அரசியல் இன்னிங்க்ஸை இன்று மதுரையில் பிரம்மாண்டமாகத் தொடங்கியிருக்கிறார்.

2. ஒருவர் "கறுப்பு" எம்ஜியார், மற்றவர் "வெள்ளை" மகாராஜா !

3. நமது விஜி மதுரையை (தமிழ்நாட்டை ?) 'மீட்க வந்த சுந்தர பாண்டியன்' ! கங்குலியோ "பிரின்ஸ் OF கல்குத்தா" (பாய்காட் கூற்றின் படி!)

4.. கங்குலி இந்திய கிரிக்கெட்டில் புது ரத்தத்தையும், உத்வேகத்தையும் புகுத்தி ஓரளவு வெற்றி கண்டவர். நமது "கேப்டனின்" செயல்பாடுகள், நடவடிக்கைகள், அரசியல் வளர்ச்சி ... பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

5. கங்குலி இந்திய கிரிக்கெட் வட்டார "அரசியலில்" தாதா !! "கேப்டன்" விஜயகாந்த் பொது அரசியலில் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார்.

6. கங்குலியின் தளபதியாக, திறமை மிக்க, அமைதியான (பதவி வெறி இல்லாத) ராகுல் திராவிட் இருப்பது அவரது மிகப்பெரிய பலம் என்று கூறலாம். கேப்டனின் தளபதியாக அவரது மனைவி உள்ளது விஜயகாந்தின் அரசியல் வெற்றிக்கு (அல்லது தோல்விக்கு!) எந்த அளவுக்கு காரணமாக அமையப் போகிறது என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

7. கங்குலி ஒரு ஸ்டைலிஷ், 'டைமிங்' மீது நம்பிக்கை கொண்ட ஒரு அருமையான ஆட்டக்காரர். விஜயகாந்த் திரைப்பட சண்டைக் காட்சிகளில் ஸ்டைலாக பாய்ந்து திரும்பி "BACK KICK" பிரயோகம் வாயிலாக வில்லன்களை பந்தாடுவதில் வல்லவர் !!!

8. இரு கேப்டன்களுமே தங்களது 'வாய்' மீது (கங்குலி பேட்டிகளிலும், விஜய்காந்த் தனது அனல் கக்கும் திரைப்பட வசனங்களிலும்!) அதிகம் நம்பிக்கை உடையவர்கள், அதனால் அதை அதிகம் பயன் "படுத்துபவர்கள்" !!!

9. இருவரிடமும் "LEADERSHIP" குணங்கள் இயல்பாகவே அமைந்துள்ளன. இருவருமே மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்கள். இருவருமே கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர்கள்.

10. கங்குலி-நக்மா தொடர்பு, விஜயகாந்த்-ராதிகா தொடர்பு --- இரண்டுமே பரபரப்பாக பேசப்பட்டு, பின்னர் ஓய்ந்து போன விடயங்கள் ஆயின !!!

11. கங்குலி வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் 'உயர' பந்துகளை எதிர்கொள்ள மிகவும் திணறுவார். நமது கேப்டனோ அரசியலில் தனக்கு யாரிடமும் பயமில்லை என்று கூறி வருகிறார் !!! பார்க்கலாம் !

12. இறுதியாக, கங்குலி மைதானத்திற்கு வெளியே (விளம்பரங்களில் !) நடிக்கிறார். "கேப்டன்" விஜயகாந்த் திரைப்படங்களுக்கு வெளியே "நடிக்க" மாட்டார் என்றே தோன்றுகிறது !!!

*********************************

Sunday, September 04, 2005

சூப்பர் ஸ்டார் --- 2 செய்திகள்

இந்த வார ஆனந்த விகடனில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் பாலிவுட்டில் ஸ்பீல்பர்க்-க்கு இணையாகக் கருதப்படும் ராம் கோபால் வர்மா ஆகியோரின் பேட்டிகள் வெளி வந்துள்ளன.

1. அமிதாப் தன் பேட்டியில், நம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவிருக்கும் சிவாஜி திரைப்படத்தில் தனக்கு ஒரு வேடம் தருமாறு தன் நீண்ட நாள் நண்பரான ரஜினியை கேட்டுக் கொண்டிருக்கிறார் ! அவர் கூறியிருப்பதாவது:
"ரஜினி சாப் ! உங்களோடு நடிச்சு ரொம்ப வருஷமாச்சு. புதுப்படத்தில் எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்குமா ? அட்லீஸ்ட் ஒரு சின்ன ரோலாவது கொடுங்களேன், ப்ளீஸ் !"

2. அடுத்து வர்மா ரஜினியைப் பற்றி, "இன்றைய இந்திய சினிமாவில் அவர் தான் ரியல் ஹீரோ! வெறுமனே திரையில் ரஜினி தோன்றினாலே அப்படி ஒரு காந்த சக்தி அவருக்கு இருக்கிறது. ஷார்ப்பான பாடி லாங்குவேஜ் ! .... சின்னப்பிள்ளைகள் வரை ரசிகர்களைச் சேர்த்து வைத்திருக்கிறாரே, சிம்ப்ளி கிரேட் ! .... அவரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும். அது தான் என் பர்சனல் விருப்பம்!" என்று வியப்பில் ஆழ்ந்து பாராட்டுகிறார்.

அது தான் 'ரஜினி' என்னும் PERENNIAL மேஜிக் !!! மேலும், பாலிவுட்டின் ஜாம்பவன்களான இவ்விருவரும் போல பலரும் தென்னக சூப்பர் ஸ்டார் மீது வைத்திருக்கும் மதிப்புக்குக் காரணம், அவரிடம் காணப்படும் எளிமையும், இனிமையாகப் பழகி நட்பு பாராட்டும் பாங்கும், கர்வமின்மையும், தன்னடக்கமும் தான் !!! 'சிவாஜி'யில் AVM, ரஜினி, சங்கர், ரஹ்மான் ஆகிய நால்வர் கூட்டணி அமைய இருப்பதால், அத்திரைப்படம் இந்திய திரைப்பட வரலாற்றில் (in all aspects) ஒரு மாபெரும் மைல் கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: ஆனந்த விகடன்

பி.கு: திட்டுவதற்கென்றே வருகை தந்திருக்கும் (சில!) கனவான்களே, (நாவடக்கமா) திட்டி விட்டுப் போங்க, ஏனெனில், "யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்று வள்ளுவம் கூறுகிறது ;-)

Friday, August 26, 2005

கௌசல்யாவுக்கு திரட்டிய உதவித் தொகை

***********************************************
எனது பிரமிக்க வைக்கும் கௌசல்யா பதிவையும் அதன் தொடர்ச்சியான மற்றொரு பதிவையும் நீங்கள் படித்திருக்கலாம். அவற்றைப் படித்த வலைப்பதிவு நண்பர்கள் சிலர் பண உதவி செய்துள்ளனர். மேலும் சிலர் உதவி செய்வதாகக் கூறியுள்ளனர்.

உங்கள் தகவலுக்காக, இது வரை கௌசல்யாவின் கல்வி உதவிக்காக திரட்டப்பட்ட மொத்தத் தொகை ரூபாய் 28,000/- இது தவிர துளசி அவர்கள் "பொது உதவி" நிதியாக ரூ.3800/- அனுப்பியுள்ளார். உதவிய நண்பர்கள் அனைவருக்கும், இவ்விஷயத்தில் உறுதுணையாக இருக்கும் ராம்கிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் !!! உதவி செய்தவர்கள் பெயர்கள் பின் வருமாறு:

ரம்யா நாகேஷ்வரன், ஜெயஸ்ரீ, பரணி, முகமூடி, துளசி, சங்கரபாண்டி, இரா.முருகன், திருமலை, சலாவுதின் பஷீர், டோண்டு, எஸ்.சங்கர் மற்றும் குழலி. இவர்கள் தவிர்த்து, மேலும் இரு (பெயர் கூற விரும்பாத) வலைப்பதிவு நண்பர்களும் பணம் அனுப்பியுள்ளனர். யார் பெயராவது விடுபட்டிருந்தால், மன்னிக்கவும். எனக்கு தனிமடலிட்டால், பெயரை பட்டியலில் சேர்த்து விடுகிறேன்.

உதவி செய்ய விரும்பும் அன்பர்கள், மேலே சுட்டியுள்ள (கௌசல்யா பற்றிய) எனது முந்தைய இரு பதிவுகளை பார்க்கவும். அவற்றின் பின்னூட்ட களத்தில் பணம் அனுப்புவது குறித்த விவரம் தரப்பட்டுள்ளது. "பொது உதவி" நிதியாகவும் உங்களால் இயன்றதை வழங்கலாம். இன்னும் இரு வாரங்களுக்குள் உதவித் தொகையை கௌசல்யாவுக்கு வழங்குவதற்கான ஏற்பாட்டை நானும் ராம்கியும் செய்து வருகிறோம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

SHOT of the Day அல்லது நெத்தியடி !

**************************************
எனக்குத் தெரிந்த ஆசனம் --- சுஜாதா

சில தியான மையங்களில் 'குண்டலினி சக்தி' என்று கூறி நமது அடிவயிற்றிலிருந்து முதுகுத் தண்டு வழியாக மேலே பயணித்து நெற்றிக்கு வந்து ஒரு 'சூப்பர் பவராக' மாறும் என்கிறார்களே, அது எப்படி ? அது உண்மையா ?

--- ஆர்.பி.ராஜ்குமார், பரமக்குடி

சுஜாதா பதில் : இதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. எதையாவது எழுதப் போய் உலகெங்கும் யோகா கிளாஸ் நடத்தி (ஜல்லியடித்துக்) கொண்டிருப்பவர்கள் "உனக்கு இதைப்பற்றி தெரியவில்லை என்றால் வாயையும் குண்டலினியையும் பொத்திக் கொண்டு சும்மா இருப்பது தானே" என்பார்கள். எனக்குத் தெரிந்த ஒரே ஆசனம் சவாசனம்.

நன்றி: குமுதம்

Wednesday, August 17, 2005

கண்கள் குளமாகும், மனம் வெதும்பும் !

Image hosted by Photobucket.com


உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய படம் இது !!!

1994-இல் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, கெவின் கார்ட்டர் என்பவர் எடுத்த, புலிட்ஸர் பரிசு வென்ற புகைப்படம் இது !!! இப்படம், கொடும்பசியால் பீடிக்கப்பட்ட ஒரு கறுப்பின பெண்குழந்தை, ஒரு கிலோமீட்டர் அப்பாலுள்ள ஒரு ஐக்கிய நாட்டு உணவு மையத்தை நோக்கி ஊர்ந்து செல்வதை சித்தரிக்கிறது.

படத்தில் காணப்படும் பிணந்தின்னிக் கழுகு குழந்தையின் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது !!! படத்தை எடுத்தவுடன் கார்ட்டர் அவ்விடத்தை விட்டு சென்று விட்டதால், அக்குழந்தையின் கதி என்னவாயிற்று என்று யாருக்குமே தெரியாமல் போனது.

மூன்று மாதங்களுக்குப் பின் கெவின் கார்ட்டர் மனஅழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார் !!!

The BOSS !

ஆதியில் மனித உடல் உருவாக்கப்பட்டபோது, உடலின் எல்லா அங்கங்களும் தாமே உடலின் தலைவராக (BOSS) இருக்க விரும்பின.

மூளை, "உடலின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்துவதால், நானே பாஸ்!" என்றது. உடனே பாதங்கள், "நாங்கள் தான் அந்த மூளையையே சுமந்து, அது விரும்பும் இடத்துக்கு இட்டுச் செல்கிறோம். எனவே நாங்களே பாஸ்!" என்றன.

உடனே கைகள், "நாங்கள் வேலை செய்து பணம் ஈட்டுவதால், எங்களுக்கே பாஸ் ஆவதற்குரிய தகுதி உள்ளது!" என்று கூறின. அதைத் தொடர்ந்து, இதயம், நுரையீரல், கண்கள் என்று பல அங்கங்களும், தாங்களே பாஸ் ஆவதற்குரிய தகுதி உடையவை என்று கூற, சச்சரவு வலுத்தது.

இறுதியாக, ஆசனவாயில் (ஆ.வா), " ஏன், நான் பாஸ் ஆகக் கூடாதா?" என்றவுடன் மற்ற அங்கங்கள் இடிஇடியென சிரித்து, அதை ஏளனம் செய்தன !!! கடுப்பான ஆ.வா தன்னை இறுக மூடிக்கொண்டு வேலை நிறுத்தத்தில் இறங்கியது !

ஒரு சில நாட்களில், அதன் விளைவாக, கண்கள் பாரமாகி, கைகால்கள் தடுமாறி, இதயமும், நுரையீரலும், மூளையும் பாதிக்கப்பட்டு, உடல் பெரும் அவதிக்கு உள்ளானது. முடிவில், மற்ற அங்கங்கள் ஆலோசனை செய்து, ஆ.வா வுக்கு பாஸ் பதவியை தந்து விட இசைந்தன.

அன்றிலிருந்து, மற்ற அங்கங்கள் தங்களுக்குரிய பணியை சரிவர இடைவிடாமல் செய்ய, தலைவராகிய பாஸ் (என்பவர்!) ஓரிடத்தில் அமர்ந்தபடி, கழிவை வெளியேற்றுவதை மட்டும் செய்து வருகிறார் !!!

Sunday, August 14, 2005

நினைவெல்லாம் நித்யா! --- A SHORT story

குமுதத்தில் ஏதோ ஒரு வாரம் சினிமா தலைப்புக்களை வைத்து ஒரு பக்கக் கதைகள் பிரசுரம் செய்யப்பட்டிருந்தன. அந்த உந்துதலில், அதே பாணியில், எனது ஒரு கதை(!) முயற்சி தங்கள் பார்வைக்கு !!! படித்து விட்டு அடிக்க வர மாட்டீர்கள் என்று ஒரு நம்பிக்கை தான் :-)
****************************************************
ஆத்மா நித்யாவின் திருமணத்திற்கு செல்ல ஆயத்தமானான். ஏனோ மனதை சோகம் கவ்வியது, தனிமையுணர்வு அவனை வதைத்தது ! சில வருடங்களாக பத்திரப்படுத்தியிருந்த கடிதங்களை கொண்டு செல்வதற்கு தயாராக வைத்திருந்தான். நித்யாவும் அவனும் சம்மந்தப்பட்டதையும், அக்கடிதங்கள் குறித்தும், யாரிடமும் சொல்வதில்லை என்று சமீபத்தில் அவளிடம் சத்தியம் செய்தது அவன் நினைவில் நிழலாடியது ! என்ன செய்வது ? 'மீறவேண்டிய கட்டாயம்' என்று நினைத்துக் கொண்டான்,

நித்யா அன்போடு வாங்கித் தந்த சந்தன நிறச் சட்டையை அணிந்து கொண்டான். அவனது ஒரு பிறந்த நாளுக்கு நித்யா வாங்கித் தந்த, இதுவரை அவன் அணிந்திராமல் வைத்திருந்த, கைக்கடிகாரத்தை கட்டிக் கொண்டான். ஒரு கோர விபத்தில் தன் தாய் தந்தையரை இழந்து, தற்கொலை வரை சென்ற அவனை மீட்டு, ஆறுதல் கூறி, மெல்லத் தேற்றி, தன்னுடன் இணைத்துக் கொண்ட நித்யாவின் உயர்ந்த குணம் யாருக்கு வரும் ? தான் வாழும் இந்த வாழ்க்கையே அவள் மீட்டுத் தந்தது தானே என்ற ஓர் எண்ணம் எழுந்து, தான் செய்யவிருக்கும் செயல் சரியானதா என்று மனதில் எழுந்த கேள்விக்கு பதிலளிக்க அவன் அப்போது தயாராக இல்லை !

திருமண மண்டபத்தில் ஜேஜே என்று கூட்டம் ! நித்யாவின் நலம் விரும்பிகள் தான் எத்தனை பேர் என்று எண்ணிக் கொண்டான். மணமேடையில் ஒரு தேவதை போல் நித்யா வீற்றிருந்தாள். 'என்ன ஒரு அற்புதமாக ஜோடிப் பொருத்தம்!' என்று ஆத்மா மலைத்துப் போனான். உடனே, தான் செய்ய இருப்பது சரி தானா என்ற தயக்கம் ஏற்பட்டது. அவனைப் பார்த்தவுடன், நித்யா, உணர்வை வெளிக்காட்டாமல், "உன்னை எதிர்பார்த்தேன், ஆத்மா ! பிரகாஷ¤க்கு உன்னை அறிமுகப்படுத்த வேண்டும், வா, வா" என்றாள்.

ஆத்மா நிதானமாக தான் எடுத்து வந்த கடிதக்கட்டை புது மாப்பிள்ளையின் கையில் அழுத்தி, "இது தான் நான் உங்களுக்கு தரும் மிகச் சிறந்த திருமணப்பரிசு !!!" என்றவுடன், நித்யா அவனை மிகுந்த சங்கடத்துடனும் குழப்பத்துடனும், கொஞ்சம் கோபத்துடன் நோக்குவதை பொருட்படுத்தாமல், "பிரகாஷ், நித்யா பல வருடங்களாக சேவை செய்து வரும் மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலம் பேணும் மையத்தில், அவளது அன்பும், அரவணைப்பும், உந்துதலும் தந்த நம்பிக்கையில், தங்கள் வாழ்க்கை மெல்லத் துளிர்வதை உணரத் துவங்கியுள்ள பிஞ்சு ஜீவன்கள் நித்யாவுக்கு, பல சமயங்களில், தங்கள் கைப்பட எழுதியும் வரைந்தும் தந்த அன்பைச் சுமக்கும் கடிதங்கள் தான் இவை ! பாரதி கண்ட புதுமைப் பெண்ணை மனையாளாகப் பெற்றதற்கு என் வாழ்த்துக்கள்" என்றான் !!!!!

பின் நித்யாவைப் பார்த்து, "என்னை மன்னித்து விடு, நித்யா! உன் நல்ல நண்பனான என்னால் இவ்விஷயத்தை உன் வாழ்க்கைத் துணையாக வருபவரிடம் சொல்லாமல் இருக்க முடியலை" என்று கூறி புன்னகைத்தான் !!!
****************************************************
என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, August 13, 2005

உதவிய நண்பர்களுக்கு நன்றி !

எனது பிரமிக்க வைக்கும் கௌசல்யா பதிவை படித்ததன் தொடர்ச்சியாக சில வலைப்பதிவு நண்பர்கள் தங்களால் ஆன பண உதவி செய்ய முன் வந்துள்ளனர். உங்களில் பலர் இந்த எனது பதிவை தவற விட்டிருக்கலாம். அதனாலேயே, இந்த வேண்டுகோளை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன். ஒரு கணிசமான தொகை திரட்டியவுடன், அதை சென்னையில் உள்ள ஒரு பிரபல வலைப்பதிவர் ஒருவர் மூலம் கௌசல்யாவிடம் (அவருக்கு பயன் தரும் வகையில்) சேர்ப்பித்து விட ஆவன செய்கிறேன்.

இது வரை, பணம் அனுப்பிய திருமதி ஜெயஸ்ரீ(USA), திருமதி ரம்யா நாகேஷ்வரன், குழலி, திரு.டோண்டு ராகவன், எஸ்.சங்கர்(தில்லி), திருமலை ஆகியோருக்கு என் நன்றிகள். இதில் ஒத்துழைப்பு தரும் ராம்கி அவர்களுக்கும் நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, August 07, 2005

1981 - A Love Story!

********************************************
இம்மாதிரி தலைப்பைப் பார்த்தவுடன், "கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா" என்று நினைத்தபடி, இப்பதிவுக்கு வருகை தந்த உங்களை நான் ஏமாற்றவே மாட்டேன் ! ஏனெனில், இது உண்மையாகவே ஒரு காதல் கதை சம்மந்தப்பட்டது தான் !!!

கொஞ்ச நாட்கள் முன், எங்கள் வீட்டுப்பரணை சுத்தம் செய்ய வேண்டி சில பழைய பெட்டி/டப்பாக்களை கீழே இறக்கி குடைந்து கொண்டிருந்தபோது, நான் முன்னொரு காலத்தில் (24 ஆண்டுகளுக்கு முன்!!!) எழுதிய சிறுகதை(யா?) ஒன்று தட்டுப்பட்டது. உடனே உங்கள் ஞாபகம்(!) தான் வந்தது! (வசமாக மாட்டினீர்களா ?). அக்கதை எழுதப்பட்டிருந்த மக்கிப் போயிருந்த காகிதங்களை ஸ்கேன் செய்து, உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்! என் கதை எழுதும் திறமையை வளர்த்துக் கொள்வதை விடுத்து, நான் பொறியியல் படிக்கச் சென்று விட்டது உங்கள் துரதிருஷ்டமே ;-)


ஒரு சின்ன பிரச்சினை! பழைய காகிதங்கள் என்பதால், கதையைப் படிக்க நீங்கள் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். இன்னுமொரு பிரச்சினை (அதானே!). கதையின் முக்கியக் கட்டத்தில் (Turning Point!) எழுத்துக்கள் அழிந்து போயுள்ளன!!! இதுவும் உங்கள் துரதிருஷ்டமே ;-)

இருந்தாலும், 'என்ன எழுதியிருப்பேன்?' என்று என் பழைய ஞாபகங்களை கடுமையாக(!) அலசிக் கொண்டிருக்கிறேன் ! ஞாபகம் வந்தால் (வரும்!) 'யுரேகா!' என்று கூவியபடி வந்து பதித்து விடுகிறேன்! அதற்குள் உங்களுக்கு அது குறித்து ஏதாவது தோன்றினால், சொல்லுங்களேன். ஆனால், அதற்காக (அதாவது, சிறந்த கற்பனைக்காக!) "பாதி ராஜ்யம் தந்து, என் பெண்ணையும் கொடுப்பேன்" என்றெல்லாம் சொல்ல நான் ஒன்றும் சுஜாதா(!) கிடையாது! அதிகபட்சமாக, டிரைவ்-இன்னில் போண்டா, காபி வாங்கித் தர இயலும் !!! இனி, 1981 - A LOVE STORY .....
***************************************************









***************************************************

ரவியின் அப்பாவுக்கு ரவியின் காதல் விஷயம் எப்படித் தெரிந்திருக்கும் என்று யாராவது யோசித்துக் கூறுங்களேன், Please !!!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, August 05, 2005

Two Images

ஆஹா !!!




ஐயோ !!!

சிந்திப்பதற்கு சில! - 1

1. முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பின் உன்னை எள்ளி நகைப்பார்கள், பின் உன்னிடம் சண்டையிடுவார்கள், பின் நீ வெல்வாய் !!!
---- யாரோ

2. வாழ்க்கையை பின் நோக்கித் தான் புரிந்து கொள்ள முடியும், ஆனால் அதை முன் நோக்கியே வாழ வேண்டும் !!
--- யாரோ

3. நம்மில் வெளியே கடவுளை காண்பது சாத்தியமில்லை. நம் ஆன்மாக்களே, புறத்தில் காணப்படும் கடவுள்தன்மைக்கு ஊற்றாக விளங்குகின்றன. நாமே தலைசிறந்த கோயில் !!! அதன் திருவுருவப்படுத்துதல் என்பது நம் அகத்தில் நாம் காண்பதின் ஒரு மிக மெல்லிய நகலே !!!
--- சுவாமி விவேகானந்தர்

4. உங்களுக்கு புலப்படும் மொத்த ஒளியின் விளிம்பில் நின்று, அறிந்திராக் கருவெளியில் நீங்கள் அடியெடுத்து வைக்கத் தலைப்படும் நேரம், திடமான தரை முன் இருக்கிறது (அல்லது) பறக்க கற்றுத் தரப்படுவோம் என்று அறிவதே நம்பிக்கை எனப்படுவதாம்.
--- பார்பரா வின்டர்

5. நாம் செய்ய அச்சப்படும் விஷயங்களை செயல்படுத்துவதை, வாழ்நாள் முழுதும், ஒரு பழக்கமாக மேற்கொள்வதே வெற்றியின் திறவுகோல் !!!
--- டிரேசி

6. கல்வி என்பது போற்றுதலுக்குரியதே. அதே நேரத்தில், தெரிந்து கொள்ள அவசியமான விஷயங்களை கற்றுத்தர இயலாது என்பதை அவ்வப்பொழுது நினைவு கூர்வதும் மிக அவசியமே !!
--- ஆஸ்கார் வைல்ட்

7. இறுதியில் கணக்கில் கொள்ளப்படுபவை, உங்கள் வாழ்வின் வருடங்கள் அல்ல, வருடங்களில் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையே!!! --- ஆப்ரஹாம் லின்கன்

8. நமக்கு முன் இருப்பதும் பின் இருப்பதும் மிக மிகச் சிறியவை, நம்முள் இருப்பதைக் காட்டிலும் !!! --- எமெர்ஸன்

9. மக்கள் மலைகளின் உயரங்களையும், கடலின் பேரலைகளையும், நதிகளின் நீண்ட பாதைகளையும், நட்சத்திரங்களின் விநோத நகர்வுகளையும் கண்டு அதிசயிக்க அதிக தூரம் கடக்கிறார்கள். ஆனால், அதிசயிக்காமலேயே தங்களை கடந்து விடுகிறார்கள்!!!
--- அகஸ்டின்

10. மனப்பிறழ்வு என்பது, ஒரே காரியத்தை ஒரே மாதிரி செய்து, அதற்கு வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பதே !!!
--- ஐன்ஸ்டைன்

11. ஒரு விடயம் குறித்த உணர்வுகளும், அது குறித்த புரிதலும் ஒன்றுக்கொன்று எதிர்மறையானவை !!!
--- ரஸ்ஸல்

Wednesday, August 03, 2005

பிரமிக்க வைக்கும் கௌசல்யா !

சமீபத்தில் பத்திரிகைகளில் வந்த, கௌசல்யா என்ற மாணவியைப் பற்றிய செய்தியை பலரும் படித்திருக்கலாம். இவ்விளம்பெண்ணின் சிறந்த கல்வியார்வமும், அயரா உழைப்பும், சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதியும், தன்னடக்கமும், யாரையும் பிரமிப்பில் ஆழ்த்தி விடும். கௌசல்யா, சிறுவயதிலேயே பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு, அந்தியூர் கிராமத்தில் ஒரு ஹோட்டலில் கூலி வேலை செய்து வரும், அவரது தாய்வழிப் பாட்டனாரால் வளர்க்கப்பட்டவர். வாழ்க்கையில் பல கஷ்டங்களை சமாளித்து, போராடி, 'மருத்துராக வேண்டும்' என்ற ஒரே குறிக்கோளோடு படித்தவர் !

கௌசல்யா, அந்தியூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்து, பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வகுப்பு பொதுத் தேர்வுகளில் முறையே 475/500 மற்றும் 1149/1200 என்று மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார் ! கௌசல்யா, இயற்பியலில் 199 மதிப்பெண்களும், வேதியல் மற்றும் உயிரியல் பாடங்களில் தலா 200 மதிப்பெண்களும், பொது நிழைவுத்தேர்வில் 98.33 மதிப்பெண்களும் பெற்றார் என்ற தகவல், கேட்பவரை வியப்பின் உச்சத்துக்கு இட்டுச் செல்லும் !!!

இவருக்கு, பெருமை வாய்ந்த, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், 'இளமையில் வறுமை' எனும் கொடுநோய் பெரும் தடைக்கல்லாக குறுக்கிட்டது. தனது அயரா உழைப்பு தந்த வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய தருணத்தில், கல்லூரிக்கு கட்ட வேண்டிய தொகை வேண்டி (ஏன், அந்தியூரிலிருந்து சென்னை செல்ல இரயில் கட்டணம் கூட கையில் இல்லாத நிலைமையில்!) பல இடங்களில் பணவுதவு கேட்டு அலைய வேண்டிய அவலநிலை இம்மாணவிக்கு ஏற்பட்டது பெரிய கொடுமை தான் !!!

கௌசல்யாவின் நல்ல நேரம், அந்தியூருக்கு வருகை தந்திருந்த மாநில மனித உரிமைக் கழக உறுப்பினர் திரு.சம்மந்தம் வாயிலாக, இம்மாணவியின் பரிதாப நிலைமை ஊடக வெளிச்சத்திற்கு வந்தது. நமது முதலமைச்சர் கௌசல்யாவை அழைத்து, கல்லூரிக்கான முதலாண்டு கட்டணத்திற்கும், புத்தகங்கள் வாங்கவும் பணவுதவி செய்தார். அதைத் தொடர்ந்து, மேலும் பல நல்ல உள்ளங்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ய முன் வந்தனர்.

கௌசல்யா, ஆகஸ்ட் 1-ஆம் தேதி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மாணவியாகச் சேர்ந்து, தனது குறிக்கோளின் முதல் இலக்கை வெற்றிகரமாக அடைந்து விட்டர் !!! கௌசல்யாவின் முகத்தில் இப்போது தான் புன்னகையை பார்க்க முடிகிறது !!! இதே போல். பல கௌசல்யாக்களுக்கு, அவர்கள் தொலைத்த புன்னகையை மீட்டுத் தர வேண்டிய கடமை, நம் சமூகத்தின் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது !!!

நம் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக, ஒரு உதவித்தொகையை திரட்டி, இம்மாணவியின் படிப்புச் செலவுக்கு வழங்கலாம் என்பது என் எண்ணம். நூறு பேர் தலா 500/- தந்தாலே, மொத்தம் 50,000/- திரட்டி விடலாம். உரியவரிடம் தொகையை சேர்ப்பிப்பது மற்றும் அத்தொகை அம்மாணவிக்கு நல்ல வகையில் பயன் தருமாறு செய்வதும் குறித்து பின்னர் முடிவு செய்யலாம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, July 30, 2005

எ.அ.பாலா - I Birthday & Flashback !

இன்றோடு (JULY 30) என் வலைப்பதிவுக் குழந்தைக்கு ஓராண்டு பூர்த்தி அடைந்தது !!! இந்த நேரத்தில் உங்களோடு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த (வலைப்பதிவு!) குழந்தை உருவாகவும், அதை பிரசவிக்கவும் (தமிழ் வலையுலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தியும், தமிழில் வலை பதிவதற்கு தேவையான டெக்னிகல் சமாச்சாரங்களை விளக்கியும்!) பேருதவியாக இருந்த 'டாக்டர்' தேசிகன் அவர்களுக்கும், புதுக் குழந்தையை அன்போடு அரவணைத்த சித்தப்பா காசிக்கும் என் நன்றிகள்! குழந்தை போஷாக்காக வளரவும் (என்னென்ன பதிந்தால் சுவாரசியமாக இருக்கும் என்றும்!) டாக்டர் தேசிகன் தன்னால் இயன்றதை செய்திருக்கிறார் !

குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. தொடக்க காலத்தில், அன்பர்கள் சிலர் (சந்திரவதனா, சிலந்தி ரமணி, அன்பு, மூர்த்தி, யளனகபக கண்ணன், இரவிக்குமார், டோண்டு, கோபி, பத்ரி ஆகியோர்) குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக (பின்னூட்டமிட்டும், பாராட்டியும்!) இருந்தனர்!

தவழ ஆரம்பித்த குழந்தை பக்கத்து வீடுகளுக்கு (மற்றவர் பதிவுகளில் கருத்து சொல்ல!) செல்லத் தொடங்கியது. பொதுவாக நல்ல வரவேற்பும் இருந்தது ! சில வீடுகளில் பொருட்களை உடைத்து (பின்னூட்டச் சண்டை சச்சரவில் மாட்டி!) அவ்வீட்டுச் சொந்தக்காரர்களின் கோபத்துக்கு (அவ்வப்பொழுது!) ஆளானதும் உண்டு ;-)

பின், குழந்தை தத்தி தத்தி மெல்ல நடை பயில (கதை, கவிதை, அரசியல், சமூகம், சினிமா, விளையாட்டு குறித்து பதிவுகள் போடத் துவங்கியதைத் தான் சொல்கிறேன்!!!) ஆரம்பித்தது. முதல் 6 மாதங்கள் குழந்தை பூர் ஜென் ஞா கங் ளில் அவ்வப்போது திளைத்திருந்தது !

நண்பனுக்கொரு மடல் எழுதி ஆனந்தப்பட்டது !!!

குழந்தை ஆர்வமாக பலமுறை ஈடுபட்ட ஒரு ஜாலியான கேளிக்கையில் பலரும் பங்கெடுத்துக் கொண்டு குழந்தையை குஷிப்படுத்தினர் :)

குழந்தை சிலபல கோமாளித்தனங்கள் (சிரித்ததற்காக கைது, படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 1 , 2 , 3 , 4 , 5 , 6 , அலுவலக வழிப்பாட்டு பாடல் , மது , மனைவிகள் போன்ற பதிவுகள்!) செய்து பார்க்க வந்தவரை கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறது !

அவ்வப்போது, சில தத்து பித்து குசும்புகள் பண்ணி சிலரை (விளையாட்டாகத் தான், குழந்தை தானே !)கலவரப்படுத்தியிருக்கிறது !!!

ஒரு முறை வெகுண்டிருக்கிறது !!!!!

நல்ல உள்ளங்களையும், திறமையையும் (Dr.வம்ஷி மூதா , MS சுப்புலஷ்மி , வெங்கடெஷ் , சுஜாதா , சகாயராஜ் , கிருஷ்ணன் ) கண்டு வியந்து பெருமிதம் கொண்டிருக்கிறது.

ஆழ்வார் பாசுரங்களில் உள்ளபக்தி ரஸத்தில் அவ்வப்போது மூழ்கியிருக்கிறது.

கவிதை என்று ஒன்றை கிறுக்கியிருக்கிறது !!!

ராஜ ராஜேஸ்வரியையும் மெட்டி ஒலியையும் பார்த்து மழலைச் சொற்களில் உளறியிருக்கிறது !! அதற்கு அந்திமழைச் சாரலாக பாராட்டும் கிடைத்தது :)

சூழலை குழந்தைத் தனமாக நக்கல் செய்து களிப்படைந்திருக்கிறது !!!

தனக்குப் மிகவும் பிடித்த கிரிக்கெட் ஆட்டம் குறித்து
ஆதங்கமும் மகிழ்ச்சியும் கோபமும் பட்டிருக்கிறது.

சில நேரங்களில் தாங்கமுடியாமல் காச்மூச் என்று கூச்சல் போட்டிருக்கிறது !!!

Last but not the least, ரஜினி அங்கிளின் சந்திரமுகியைப் பார்த்து கை தட்டி சந்தோஷ ஆரவாரம் பண்ணியிருக்கிறது !

இதற்கு மேல் என் குழந்தையைப் பற்றி நானே பெருமை பேசினால் நன்றாக இருக்காது என்பதால் இத்துடன் விடு ஜூட் (அல்லது) மாயவரத்தான் பாஷையில் 'அப்பீட்' ஆகிக் கொள்கிறேன் ;-)

இவ்வலைப்பதிவுக் குழந்தையின் (சுமாரான!) வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற ஊக்கத்தை நல்கிய (பதிவுகளைப் படித்து பின்னூட்டமிட்ட/பின்னூட்டமிடாத, பதிவுகளைப் படிக்காமல் பின்னூட்டமிட்ட/பின்னூட்டமிடாத, +/- நட்சத்திர பரிந்துரை செய்த/செய்யாத!) அன்பான வாசகப் பெருமக்களாகிய வலைப்பதிவுலக நண்பர்களுக்கு, இருகரம் உயர்த்தி நன்றி, நன்றி, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!

Good Bye!

என்றென்றும் அன்புடன்
பாலா

பி.கு: ஒரு வருடத்தில் பதித்தவை - 148 பதிவுகள் இதையும் சேர்த்து !!!

கலகலகல --- 8 வரிக் கவிதை மாதிரி !

பா.ம.க எதிர்ப்பென எத்தனை நாள் ஜல்லியடிப்பீர் நீங்கள் !
திரையொளித் தலைவனெனெ எந்நேரமும் ஜல்லியடிப்போம் நாங்கள் !
நிழலெது நிஜமெது ..அறியாத் தமிழர்கள் என்றும் எள்ளுவோம் நாங்கள் !

திருமாவின் சிங்கப்பூர் பயணம் ..லூஸ்மோகனின் கோயம்பேடு பயணம்
-- ஜாலிக்கு எழுதினால், 'என்ன கொழுப்பு' என்று பாய்வோம் நாங்கள் !

அன்புமணியின் அரசியல் சாதனை, பெருமை பேசுவோம் நாங்கள் !
தார் பூச்சு ..தில்லி ..ஆங்கிலப்பள்ளி ..என்ன இப்படி என்றால்
ஐயோ, ஊடக வன்முறை என்று கூப்பாடு போடுவோம் நாங்கள் !



பின்குறிப்பு:

இது ஒரு ஜாலி (ஜல்லி அல்ல!) கவிதை(யா?) முயற்சி !
மேலும், இது Secularism குறித்த கவிதையும் அல்ல :)

குறிவைத்து எழுதவில்லை என்றும் சொல்ல முடியவில்லை !
ஆனால், நிச்சயமாக யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை.
படித்து விட்டு மறந்து விடவும் :)

Monday, July 25, 2005

லகலகலக - Analysis of Original Risk Analysis

பிளஸ் பாயிண்ட்

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு (சொந்த தயாரிப்புனா பல பிரச்சினைகள் வருமே) --- 2%

ஏற்கனவே இரண்டு மொழிகளில் மெகா ஹிட்டான மகா பாதுகாப்பான கதை - 5%

அரசியல் தலைவரிடம் சமரசம் செய்து கொண்டது --- 0%

சமரசத்திற்காக பஞ்(சர்)ச் டயலாக் பேசாதது --- 0.5%

சமரசத்திற்காக அரசியலை தாக்கும் வசனங்களை வைக்காமல் பாதுகாப்பான வசனங்கள் வைத்தது --- 0.5%

சமரசத்திற்காக ஸ்டைலாக புகை பிடிக்கும், தண்ணியடிக்கும் காட்சிகள் வைக்காதது --- 5% (ரசிகர்கள் நலனை மனதில் வைத்ததால் !)

20 வயது கதாநாயகி --- 2%

ஜோதிகாவின் முட்டை கண் மற்றும் நடிப்பு --- 6%

நகைச்சுவை புயல் --- 4%

நாயகனுக்காக கதை என்பதை கதைக்காக நாயகன் என்ற வியூகம் --- 2%

திரைவெளிச்சத்திலே தலைவனைத் தேடும் தமிழர்கள் --- 0.5%

சிலர் துர்நாற்றம் மிக்க இடங்களில்(!) தலைவனைத் தேடுகிறார்கள். ஜனநாயகத்தில் தலைவனை எங்கு வேண்டுமானாலும் தேடிக் கண்டுபிடிக்க / தேர்ந்தெடுக்க அவரவருக்கு உரிமை உண்டு தானே!!

நிழலுக்கும் நிசத்துக்கும் வித்தியாசம் தெரியாத தமிழர்கள் --- 0%

மிக நிச்சயமாக, நிழலுக்கும் நிசத்துக்கும் வித்தியாசம் தெரிந்தவர்களாகவே தமிழர்களை கருதுகிறேன் ! நிசத்தில் சிலர் அடிக்கும் கோமாளித்தனங்களையும், லூட்டியையும் கண்டு நொந்து நூலாகி, நிழலில் சற்று நேரம் அதை மறந்து சந்தோஷமாக இருக்கிறார்கள் !!! அதில், தவறொன்றும் இல்லை.

மற்றும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் --- நூறிலிருந்து மேலே குறிப்பிட்டுள்ளவைகளின் சதவிகிதங்களை கழித்துப் பார்த்தால் சுலபமாக கண்டுபிடித்து விடலாமே :) எங்கே, கணித்துச் சொல்லுங்க, பார்க்கலாம்! ரஜினியின் 'பிளஸ் பாயிண்ட் சதவிகித மதிப்பை' முதலில் பின்னூட்டுபவருக்கு, ஒரு பரிசு காத்திருக்கிறது :)



மைனஸ் பாயிண்ட்

படத்தை ஹிட் ஆக்கியே தீரவெண்டுமென புகுத்தப்பட்ட இரட்டை அர்த்த நகைச்சுவைகள்
---- சரி தான்! (என் மனைவியும் இதை மைனஸ் பாயிண்டாக குறிப்பிட்டார், so accepted ;-))))) ஆனால், அதற்கும் ஹிட்டுக்கும் சம்மந்தம் இருப்பதாகத் தோன்றவில்லை.

மற்றவைகள் பல பதிவுகளில் விமர்சிக்கப்பட்டு விட்டது

கோபி என் பதிவில் பின்னூட்டியது, உங்களுக்காக, REPEAT .....
*****************************
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாய் (1933 முதல் 2005 வரை) உலகம் முழுதும் 156 திரையரங்குகளில் 100வது நாள்.

தனது சாதனையை தானே தகர்த்துள்ளார் ரஜினி ( முந்தய சாதனை படையப்பா 139 திரையரங்குகளில் 100வது நாள்)

ஆனால் ஒரு திரைப்படத்தை ரசிகர்களால் மட்டுமே 100 நாட்கள் கடந்து ஓட்ட முடியாது. பொது மக்களும் Repeated Audience என்று சொல்லக் கூடிய சாதாரண மக்களும்தான் இந்த வெற்றிக்கு முழு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை
********************************

பின்குறிப்பு:

சை... கடைசியில் என்னையும் 'லகலகலக' பற்றி analysis பண்ண வைத்து விட்டார்களே .... தேவுடா, தேவுடா ....

இப்பதிவின் trend-ஐ பின்பற்றி இன்னும் சிலர் பிளஸ் பாயிண்ட்டுகளுக்கு தப்பு தப்பாக(!) சதவிகித மதிப்பு போடுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, July 24, 2005

அமெரிக்காவின் ஏமாற்று வேலை --- India Cheated

பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க பயணத்தையொட்டி, இந்திய-அமெரிக்க நாடுகளுக்கு இடையே கையெழுத்தான பாதுகாப்பு உடன்படிக்கையில், இந்தியாவுக்கு சாதகங்களை விட பாதகங்கள் அதிகம் என்று தெரிகிறது. இம்மாதிரி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு சம்மந்தப்பட்ட sensitive-ஆன விஷயங்களில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி, முக்கிய கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்து முடிவு எடுக்க வேண்டியது "ஜனநாயக" நாட்டில் மிக அவசியம் !!!

இதில், பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே ஒரே மாதிரி தான் செயல்படுகின்றன !!! இரண்டும், ஒரே (கலங்கிய!) குட்டையில் ஊறிய மட்டைகள் தாமே ! இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின் சில பகுதிகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இன்னபிற, அரசாங்கத்தை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தெரிய வராமல், கடைசி வரை ரகசியமாகவே இருக்கும் என்பது தெளிவு !!!! இதெல்லாம், இங்கு ஜனநாயகம் என்ற பெயரோடு நடக்கும் அராஜகப் போக்கு !

இடதுசாரி கட்சிகள், இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, காங்கிரஸ் தான்தோன்றித் தனமாக எடுத்த முடிவுகளைக் கண்டு மிகுந்த கோபத்தில் இருக்கின்றன. அதுவும், பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தனை திமிர் கூடாது !!! இடது சாரிகள் அரசாங்கத்துக்கான தங்கள் ஆதரவை திரும்பப் பெற்றால் கூட தவறில்லை என்று தான் தோன்றுகிறது. இவ்விஷயத்தில், இடதுசாரிகளின் நிலைப்பாடு நியாயமானது என்றே நினைக்கிறேன். வல்லுனர்களின் துணையோடு, நாம் வரையறுத்துள்ள அணு ஆராய்ச்சி திட்டத்தில் / பாலிஸியில் தலையிட்டு இந்தியாவின் கையை முறுக்க அமெரிக்காவுக்கு அனுமதி அளித்துள்ள நமது அரசாங்கமும், மெத்தப் படித்த நமது பிரதமரும் கண்டனத்துக்குரியவர்கள்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், நம் அரசாங்கம் விட்டுக் கொடுத்துள்ள இரண்டு முக்கிய உரிமைகள், நமக்கு மிகுந்த சங்கடத்தையும், பண விரயத்தையும் ஏற்படுத்த வல்லவை.
1. நமது அணு ஆற்றல் உற்பத்தி உலைகளை சர்வதேச ஆய்வுக்கு உட்படுத்த ஒப்புக் கொண்டது. நம் சுதந்திர செயல்பாட்டுக்கு இது குந்தகமானது.
2. நமது அணுவுலைகளை, ராணுவம் மற்றும் ராணுவம் சாரா தேவைகளுக்கு என்று வகைப்படுத்த ஆவன செய்ய ஒப்புக் கொண்டது. இது குறித்து, நமது தொழில்நுட்ப வல்லுனர்கள் மிகுந்த அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த சலுகைகளுக்கு பதிலாக, அமெரிக்கா இந்தியாவுக்கு உருப்படியாக ஏதும் தர/செய்ய இசைந்ததாகத் தெரியவில்லை, அமெரிக்கா நமக்கு தர முன் வந்த இரண்டு பெரிய(!) சலுகைகளைத் தவிர !!! அதாவது, இம்முறை நம் பிரதமருக்கு மிகப் பிரமாதமான, பிரம்மாண்டமான வரவேற்பு அளித்ததும், பிரணாப் முகர்ஜியை விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்கு (ஜார்ஜ் பெர்னாண்டஸ் போல்!) உட்படுத்தாமல் விட்டதும் தான் !!!!

ஏதேச்சதிகார புஷ் தலைமையிலான அமெரிக்காவின் அடிவருட வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏன் ஏற்பட்டது என்று யாராவது விளக்கினால் பரவாயில்லை! அதே போல், இந்தியாவுக்கு ராணுவத் தளவாடங்களை விற்று, அமெரிக்கா இன்னும் கொழுக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளதா என்று அரசாங்கம் தெளிவுபடுத்தினால் நல்லது. ஏதேச்சதிகார போக்கில், 'ஜனநாயக' அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தோன்றவில்லை !! ஆனால், அமெரிக்காவுடன், நமக்கு பாதகம் இல்லாத வகையில், சமனான நல்லுறவு வைத்திருத்தல் தவறில்லை.

Thursday, July 21, 2005

Sparkling Century by C.M !

Image hosted by Photobucket.com

எதிர்பார்த்தது போலவே சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி, திரையிடப்பட்ட 4 வாரங்களில் வசூல் சாதனை படைத்து இன்று நூறாவது நாள் என்ற வெற்றி இலக்கை தொட்டிருக்கிறது !!! 'பாபா' அடைந்த சூப்பர் தோல்வியை இந்த அபார ஓட்டம் மறக்கடிக்க செய்து விட்டது ! "தலைவரின்" ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் (என்ன, ராம்கி, ஐகாரஸ், மாயவரத்தான், சரி தானே ?) இருக்கிறார்கள் !

ரஜினி தமிழ் திரையுலகில் ஒரு PHENOMENON என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது ! பாபாவில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி' மூலம் விஸ்வரூபம் எடுத்து தான் (மட்டுமே!) சேம்பியன் மெட்டிரீயல் என்று ரஜினி பலருக்கும் உணர்த்தியிருக்கிறார் ! கிரிக்கெட்டுக்கு ஒரு சச்சின், டென்னிஸ¤க்கு ஒரு பீட் சாம்ப்ராஸ் போல, தமிழ் திரையுலகிற்கு ஒரு சூப்பர் ஸ்டார் தான் அன்றும், இன்றும், என்றும் !!!

"ஜக்குபாய்" கதையை நிராகரித்து, 'ரஜினி பார்முலா' படங்களிலிருந்து சற்றே மாறுபட்ட சந்திரமுகியை தைரியமாக தேர்வு செய்து நடித்து அப்படம் மகத்தான வெற்றியை பெற்றதன் மூலம், இனி வரும் படங்களில் சற்று வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க (தற்போது அமிதாப் நடிப்பது போல) சூப்பர் ஸ்டார் முன் வந்தால், அது அவர் திரையுலக வாழ்வில் மற்றுமொரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்பதில் ஐயமில்லை !!! இன்றும் நினைவில் நிற்கும் படங்கள் அவர் நடித்த முள்ளும் மலரும், இளமை ஊஞ்சலாடுகிறது, புவனா ஒரு கேள்விக்குறி, மூன்று முடிச்சு ஆகியவை தானே !!!

மற்ற ரஜினி படங்கள் போல் அல்லாமல், சந்திரமுகியில் கதைக்கு (ரஜினியை விட!) அதிக முக்கியத்துவம் இருந்தது. பாபாவைத் தொடர்ந்த 3 வருட இடைவெளியும் ரஜினியை திரையில் காணவேண்டும் என்ற ஆவலை மக்களிடையே அதிகப்படுத்தி இருந்தது ! ரஜினியின் 'படையப்பா' சந்திரமுகியைக் காட்டிலும் சுவாரசியமாக (ரம்யா கிருஷ்ணனின் பாத்திர வடிவமைப்பும் இதற்கு ஒரு முக்கியக் காரணம்!) எடுக்கப்பட்டிருந்தாலும், படையப்பா அதன் முழு ஓட்டத்தில் திரட்டிய வசூலை, சந்திரமுகி நான்கே வாரங்களில் மிஞ்சி விட்டது என்பது ஓர் ஆச்சரியமான செய்தி !!!

அந்நியன் வசூலில் சந்திரமுகியை முந்துமா என்ற கேள்விக்கு ஓர் எளிமையான பதிலிருக்கிறது !!! அதாவது, "சான்ஸே இல்லை" என்பது தான் :) அந்நியன், 'இந்தியன்', 'முதல்வன்' ஆகிய இரு படங்களைத் தொடர்ந்து வந்த மற்றுமொரு (பிரும்மாண்டத்தையும், கருட புராணத்தையும், மல்ட்டிபிள் ஸ்பிலிட் gimmick-களையும் நம்பி வந்த !) ஸ்டீரியோடைப் சங்கர் படம் ! இது தான் அந்நியனுக்கான ஒரு வரி விமர்சனம் !!!!! சந்திரமுகியும் ஸ்பிலிட் பெர்சனாலிட்டி குறித்த படம் தான் ! ஆனால், அது ஒரு "ரஜினி" படம் :)

இறுதியாக ஒரு கொசுறுச் செய்தி! ரஜினியின் அடுத்த படத்தை பூர்ணசந்திர ராவ் தயாரிக்கிறார். பி.வாசு தான் மறுபடியும் இயக்கப் போகிறார். ரஜினியின் முதல் ஹிந்திப் படமான அந்தாகானூனை தயாரித்தவர் ராவ் தான். அப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் பெற்ற சம்பளம், அதிகமில்லை ஜென்டில்மென், 7 லட்சம் தான் !!!!!!!!!!!!!!!!!

நன்றி: ரஜினி ராம்கி! (புரியும் என்று நினைக்கிறேன்!)

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, July 16, 2005

மகாபாரதம் --- Questions

**********************
மகாபாரதம் இதிகாசமா, கடவுள் புராணமா, பேரிலியக்கமா என்பதையெல்லாம் விடுத்து, அதில் படைக்கப்பட்டிருக்கும் சிலபல கதாபாத்திரங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கலாம். அவற்றில் சில கதாபாத்திரங்களை கீழே குறிப்பிட்டுள்ளேன். அவற்றைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் உடனடியாகத் தோன்றும் ஒரு (தமிழ்!) வார்த்தையை கூறுங்களேன் பார்க்கலாம் !!! உதாரணத்துக்கு சகுனி என்றவுடன் "சூதாட்டம்" என்ற சொல் மனதில் எழலாம் !

1. அர்ஜுனன்
2. தர்மன்
3. பீமன்
4. கர்ணன்
5. துரியோதனன்
6. திருதாஷ்டிரன்
7. விதுரர்
8. சிகண்டி
9. கிருஷ்ணர்
10. துச்சாதனன்
11. அபிமன்யு
12. பீஷ்மர்
13. துரோணர்
14. அஸ்வத்தாமன்
15. குந்தி
16. திரௌபதி
17. ஏகலைவன்
18. சல்லியன்
******************************

Tuesday, July 12, 2005

SUPERSTAR விசிலடிக்கிறார் !

இளையராஜாவின் திருவாசகம் ஓரட்டேரியோ வெளியீட்டு விழாவில், வைகோவின் உணர்ச்சி மிகு பேச்சைக் கேட்டு ரஜினி உற்சாகமாகி விசில் கொடுக்கிறார் ! இசைஞானி அவர்கள் அதை ரசிக்கிறார். ரஜினி கலந்து கொண்ட சமீபகால விழாக்களில் இவ்வளவு ஜாலியாக இருந்தது இந்த விழாவில் தான் !!!

Image hosted by Photobucket.com

Friday, July 08, 2005

படமும் நகைச்சுவையும் - 2













பி.கு: முதல் படம் நிச்சயமாக அன்புமணி அவர்களுக்கு பிடிக்காது !!!

ஒரு திகிலான மனோதத்துவ தேர்வு --- விடை இதோ !!!

சிறந்த விடை: அவ்விளம்பெண் தனது தங்கையின் இறுதிச் சடங்கில் அவள் முன் சந்தித்த வாலிபன் தோன்றக்கூடும் என நம்பியதால், அக்கொலையை வேறு வழியின்றி(!) செய்தாள்.

மேற்குறிப்பிட்ட பதிலைக் கூறியவர்கள், ஒரு சைக்கோவைப் போல சிந்தித்தவர்கள் !! ஆபத்தானவர்கள் !!! இனிமேல், அவர்களிடம் (ஞானபீடம் மற்றும் அபூ முஹை) நான் எச்சரிக்கையாக இருப்பேன் ;-)
ஆண்டவனுக்கு நன்றி !!!

ஏனெனில், அமெரிக்காவில், குரூரக்கொலைகள் பல செய்த சைக்கோ கொலைகாரர்கள் ஒரு பிரபல மனோதத்துவ நிபுணர் கேட்ட இக்கேள்விக்கு இதே விடையைக் கூறினார்கள் !!!!! இந்த சிறந்த பதிலை கூறாதவர்கள் சந்தோஷப்படலாம், கூறாதது அவர்களுக்கு நல்லதும் கூட :)

என்றென்றும் அன்புடன்
பாலா

ஒரு திகிலான மனோதத்துவ தேர்வு !!!

கீழுள்ளதை மிக கவனமாக படித்து விட்டு இறுதியில் கேட்கப்பட்டிருக்கும் வினாவுக்கு நேர்மையான விடை தாருங்கள் !!!

இது நீங்கள் அறியா(!) உங்கள் குணாதசியத்தை அறிந்து கொள்ள நிச்சயம் உதவும்.

ஓர் இளம்பெண், தன்னுடைய தாயின் இறுதிச் சடங்கில் முன் அவள் பார்த்திராதா/அறியாத ஓர் ஆடவனைச் சந்தித்தாள். தான் சந்தித்த ஆடவர்களிலேயே அவன் தான் சிறந்தவன் என்றும், தன் கனவுக் காதலன் என்றும் தீர்மானித்து அவன் மேல் உடனே காதல் கொண்டாள் !!! துரதிருஷ்டவசமாக அவள் அவன் முகவரியையோ, தொலைபேசி எண்ணையோ கேட்டு வாங்க மறந்து போனாள். அவள் எவ்வளவு முயன்றும் அவளை வசீகரித்த அந்த வாலிபனை அவளால் கண்டுபிடிக்க இயலவில்லை. மிகுந்த
கவலைக்குள்ளானாள் ! பசலை நோய் அவளை வாட்டியது !

சரியாக 7 நாட்களுக்குப் பின் அந்த இளம்பெண் தன் அருமைத் தங்கையை கொலை செய்தாள் !!!!!

கேள்வி: அவ்விளம்பெண் தன் தங்கையை கொலை செய்யுமளவுக்கு என்ன நடந்திருக்கும் ? எது அக்கொலைக்கு தூண்டுதலாக அமைந்திருக்கும் ?

குறிப்பு: இக்கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த விடைகள் உண்டு !!!!!!

நன்றாக சிந்தித்து விட்டு நீங்கள் தரப்போகும் நேர்மையான பதில் உங்களைப் பற்றி நீங்கள் சரியாக அறிந்து கொள்ள வழி செய்யும் !!!

இக்கேள்விக்கான விடைகளை தனிப்பதிவில் (நாளை) சொல்கிறேன்!

வலைப்பதிவு நண்பர்கள் தங்கள் விடையை பின்னூட்டத்தில் பதியவும்.

இத்தேர்வு குறித்து ஏற்கனவே படித்தறிந்த வலைப்பதிவாளர்கள், தயவு செய்து இதில் கலந்து கொள்ள வேண்டாமே !

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, June 30, 2005

முதல் (II class) இரயில் பயணத்திற்கு தமிழில் வழிகாட்டி...

ஊக்கம்: முகமூடியின் இப்பதிவு மட்டுமே!!!

இது இந்தியாவை (சென்னையிலிருந்து கிளம்பும் இரயில்களை!) மனதில் வைத்து மட்டுமே எழுதப்பட்டது. இரயிலில் கரன்ஸி, பர்ஸ் மற்றும் உடைமைகளுக்கு நீங்களே பொறுப்பு ! (இரயிலின் படங்கள் வேண்டுபவர்கள் எனக்கு ஒரு வரி மின்னஞ்சல் அனுப்புங்கள்...)

முன்னேற்பாடு

* உங்கள் லக்கேஜின் எடை பற்றியெல்லாம் கவலை வேண்டாம் (உங்களால் அதை தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா என்பது தவிர !!!)
* நெடுந்தூர பயணம் என்றால், இரயிலில் சாப்பிட புளிசாதம், இட்லி, சப்பாத்தி என்று வகையாக (சீக்கிரம் ஊசிப் போகாத அயிட்டங்களாக!) சாப்பாடு கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வழியில் வரும் ரயில் நிலையங்களில் கிடைக்கும் உணவை உண்டால் வயிறு புடுங்கிக் கொள்ளலாம் !!!
* இரயில் டிக்கெட், போர்வை, சோப்பு, சீப்பு, செயின், பஞ்சு (காது ப்ராப்ளம் இருந்தால்!) வகையறாக்கள்
* தண்ணீர் --- குடிக்க வாங்கிக் கொள்ளலாம், ஆனால், நெடுந்தூர பயணம் என்றால், இரயிலில் ஏறிய அடுத்த நாள் கழிவரையில் தண்ணீர் வராது. எனவே ...... (பேப்பரே ஓகே என்றால் உங்கள் இஷ்டம் !!!)
* ஆட்டோக்காரருடன் மல்லு கட்ட வேண்டிய (மனித / லக்கேஜ் கட்டணம் ...) சூழ்நிலைக்கான சாத்தியம் அதிகம் இருப்பதால், இரயில் நிலையம் செல்ல சற்று முன்னதாகவே கிளம்பவும் !
* ரொம்ப தாமதமாக கிளம்பினாலும், ஆட்டோக்காரரிடம் இரயில் புறப்படும் நேரத்தைக் கூறி, ஒரு பத்து ரூபாய் எக்ஸ்டிரா தருவதாக கூறி விட்டால், எப்பாடு பட்டாவது உங்களை இரயில் புறப்படும் முன்பாக, நிலையத்தில் சேர்த்து விடுவார், ஆனால், சேரும்வரை அவர் ரோடு மேல் செய்யும் சாகசங்களைக் கண்டு, உங்களுக்கு நாக்கு வெளியே தள்ளி விடும் என்பது ஒரு சின்ன எச்சரிக்கை !!!
* இரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 3 நிமிடங்கள்(!) முன்பாக இரயில் நிலையத்தில் இருப்பது நலம் !!!


இரயில் நிலையத்தில்


* உங்கள் லக்கேஜ் அதிக எடை இருந்தால், இரயில்வே அலுவலர் கண்ணில் படாமல், போர்ட்டரை வைத்து இரண்டு டிரிப் அடித்து, இரயிலில் லக்கேஜை (இருக்கைகளுக்கு கீழே!) நைசாக ஏற்றி விடுங்கள். மாட்டினால், தண்டம் அழ வேண்டி வரும்.
* இரயில் நிலையத்தில் எஸ்கலேட்டரும் கிடையாது, தள்ளுவண்டியும் கிடைக்காது !(போர்ட்டர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் அவை இருக்கும்!)
* பட்டாஸ் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது !!! TTE யிடம் மாட்டினால், டின் கட்டப்படுவது நிச்சயம் !!!
* தலைவலி மாத்திரை கைவசம் வைத்திருங்கள். ஏதாவது அறுவையான சகபயணி மாட்டினால் உபயோகமாக இருக்கும் !
* நிலையத்தில் ஜாலியாக தம் அடித்து விட்டு, வண்டி புறப்பட்டவுடன், ஓடிப்போய் (ஸ்டைலாக) ஏற முயற்சிக்காதீர்கள் ! வழுக்கி தண்டவாளத்தில் விழுந்தால், சிவலோக பதவி நிச்சயம் !!!
* சரக்கு அடித்து விட்டு இரயிலில் ஏறுங்கள். சரக்கோடு ஏறினால், இரயில்வே போலிஸிடம் மாட்டுவது நிச்சயம் !


இரயிலில்

* இரவு இரயில் என்றால், TTE வருவதற்கு முன்பே, உங்கள் பெர்த்தில் ஏறி தூங்காதீர்கள். அவர் உங்களை எழுப்பி உங்கள் டிக்கெட்டை எப்படியும் பரிசோதிப்பார். கொஞ்சம் கடுப்பும் அடிப்பார் !!!
* இரயிலில் ஏறியவுடன் லுங்கி அல்லது பெர்முடாஸ¤க்கு மாறி விட்டால், வீட்டில் தூங்குவது போலவே தூங்கலாம்.
* உங்கள் லக்கேஜை, நீங்கள் எடுத்துச் சென்ற செயினை (சங்கிலி) வைத்து, இருக்கையுடன் இணைத்து பூட்டி விடுங்கள். இல்லையேல், நிம்மதியாக உறங்க முடியாது.
* நல்ல ஷ¥க்கள் போட்டிருந்தால், அவற்றை பெர்த்தில் தலைக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள் !!! இல்லையேல், அவை லவட்டப்படும்.
* எதுவும் இலவசமாகக் கிடைக்காது ! ஆனால், சில நல்லவர்கள், பிஸ்கட் இலவசமாக தரக்கூடும். அதை வாங்கி சாப்பிட்டால், ஆசுபத்திரியில் தான் கண் முழிக்க நேரிடும் (தலை பாரத்தோடு!)
* வழியில் பழம் தவிர எதையும் வாங்கித் தின்னாதீர்கள். மேலே சொன்னபடி, வயிறு பிடுங்க வாய்ப்பு அதிகம் !
* ஓசிப் பத்திரிகைகள் சகபயணிகளிடம் கிடைக்கும். தாராளமாக வாங்கிப் படியுங்கள் !
* இரயிலில் இருக்கும் டுபாக்கூர் மின்விசிறியை ஓட வைக்க, உங்கள் சீப்பு உபயோகமாக இருக்கும். அது ஏற்படுத்தும் இரைச்சல் கண்டு பயப்படாதீர்கள் !
* கீழ் பெர்த்தில் ஜன்னலை திறந்து வைத்து படுத்திருந்தால், உங்கள் செயின், வாட்ச், ஆகியவற்றுக்கு உத்திரவாதம் கிடையாது.


இறங்குமிடம்

* நீங்கள் இறங்க வேண்டிய இரயில் நிலையம் எப்போது வரும் என்று TTE யிடமோ சகபயணியிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
* பின்னிரவில் தான் நீங்கள் இறங்குமிடம் வருமானால், உஷாராக பார்த்து இறங்கவும். இல்லையெனில், ஏதோ ஒரு ஊருக்கு சென்று பாயை பிராண்ட நேரிடும் !
* டிக்கெட்டை காணவில்லையெனில், கூட்டத்தோடு கூட்டமாக நைசாக நழுவி விடுங்கள். இல்லையெனில், டிராக்கை தாண்டி ஏதாவது குறுக்கு வழியில் வெளியே ஓடி விடுங்கள் !
* நிலையத்தின் வெளியே, மறுபடியும், ஏதோ ஓர் ஆட்டோக்காரருடன் தகராறு செய்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லுங்கள் !


இந்த இடத்தில் உங்கள் முதல் இரயில் பயணம் இனிதே நிறைவடைந்தது... வருக வருக...

* நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான இன்னொரு விஷயம் இருக்கிறது.... இரயில் நாற்றம் எல்லாம் போக குளித்த பிறகு, இந்த பதிவிற்கு மறக்காமல் ஒட்டு போடுங்கள்....

© பாலா

இதனை பகுதியாகவோ முழுதாகவோ பயன் படுத்த நினைப்போர் செய்ய வேண்டியது :

அ) உங்கள் பயன்பாட்டில் நன்றி என்று பாலா பதிவிற்கு இணைப்பு கொடுங்கள்
ஆ) இந்த பதிவிற்கு ஓட்டு போடுங்கள்.

மீறுபவர்களுக்கு இரயில் பிரயாணச் சூட்டினால் மலச்சிக்கல் வரக்கடவது...

டிஸ்க்ளெய்மர்: இந்த கட்டுரை ஒரு வழிகாட்டி(அல்லது கையேடு) மட்டுமே... இதனால் ஏற்படும் பண, மன உளைச்சல்களுக்கு நான் பொறுப்பல்ல.

Sunday, June 26, 2005

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க --- 6-வது பதிவு

1. தொழில் நுட்பத்தின் உச்சம் !

ஒரு முறை, ஒரு அமெரிக்கர், ஒரு ஜப்பானியர் மற்றும் ஒரு சர்தார் ஒரு பொழுதுபோக்கு நிலையத்தில் (Recreation club !) அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென ஒரு 'பீப்,பீப்' ஒலி எழும்பியது. உடனே அந்த அமெரிக்கர் தன் மணிக்கட்டை அழுத்த அந்த ஒலி நின்றது! அவர், "என் பேஜர் எழுப்பிய ஒலி தான் அது. என் மணிக்கட்டின் தோலுக்குக் கீழே ஒரு மைக்ரோ சிப் பதிக்கப்பட்டுள்ளது!" என்று பெருமிதப்பட்டார் !

சில நிமிடங்களுக்குப் பின், ஒரு தொலைபேசி மணியொலி கேட்டது. உடனே அந்த ஜப்பானியர் தன் வெறும் உள்ளங்கையை காதுக்கு அருகே வைத்துப் பேசிவிட்டு பின்னர் பெருமை பொங்க, "அது எனது செல்·போன். அதற்காக, என் உள்ளங்கையில் ஒரு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது!" என்று கூறியவுடன் நமது சர்தாருக்கு அவரது தொழில்நுட்பக் கீழ்நிலை குறித்து மிக்க மனவருத்தம் ஏற்பட்டது.

சர்தாருக்கு கழிவறை செல்ல வேண்டியிருந்ததால், அவ்விடத்திலிருந்து அகன்றார். அங்கிருந்து திரும்பியவுடன், அவரது பின்புறத்தில் கழிவறைக் காகிதம் தொங்கிக் கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. மற்ற இருவரும், "என்ன இது ?" என்று கிண்டலாக கேட்டனர்.

உடனே நமது புத்திசாலி சர்தார், சமயோஜிதமாக, "ஓ, அதுவா ? எனக்கு ·பேக்ஸில் (FAX) தகவல் வந்திருக்கிறது!!!" என்று ஒரு போடு போட்டார் !!!!!!!!!! மற்ற இருவரும் வாயடைத்து நின்றனர்.

2. நரகமும் தொலைத் தொடர்பும் !


ஒரு அரசியல்வாதி, ஒரு திருடன் மற்றும் ஒரு மென்பொருளாளர் ஆகியோர் இறந்தவுடன், நரகத்திற்கு சென்றனர். அரசியல்வாதி, "எந்நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது என்று அறிய தொலைபேச விரும்புகிறேன்" என்று கூறி, தொலைபேசியில் 5 நிமிடங்கள் பேசி விட்டு, நரகத்திலிருந்த சாத்தானைப் பார்த்து, "நான் பேசியதற்கு கட்டணம் எவ்வளவு?" என்றவுடன், சாத்தான், "5 லட்சம் ரூபாய்" என்றது ! அவர் பதில் பேசாமல் ஒரு செக் எழுதிக் கொடுத்தார் !

அடுத்து, அந்தத் திருடன் தன் சகாக்களுடன் தான் பேச விரும்புவதாகக் கூறி, தொலைபேசியில் 2 நிமிடங்கள் பேசினான். "எவ்வளவு தர வேண்டும்?" என்றதற்கு சாத்தான், "10 லட்சம் ரூபாய்!" என்றவுடன், திருடன் கடுப்புடன் 10 லட்சத்திற்கு செக் கொடுத்தான் !

அந்த மென்பொருளாளன், "நானும் எனது தகவல் தொழில் நுட்பத் துறை நண்பர்களுடன் அளவளாவ ஆசைப்படுகிறேன்" என்று சாத்தானிடம் சொல்லி விட்டு, தொலைபேசியில், தொழில்நுட்பம், பிராஜெக்ட் மற்றும் மேலாளர்கள் குறித்து தொடர்ந்து 20 மணி நேரம் கதைத்து விட்டு, சாத்தானிடம் அலட்சியமாக, "எவ்வளவு கட்டணம்?" என்றான்.

சாத்தான், "நானூறு ரூபாய்!" என்றவுடன் அதிர்ந்து போன அப்பொறியாளன், "என்ன, நானூறு ரூபாய் தானா!!!" என்றவுடன் சாத்தான், "ஒரு நரகத்திலிருந்து இன்னொரு நரகத்திற்கு தொலைபேசினால் அது உள்ளூர் அழைப்பு (LOCAL CALL) தான்!!!" என்றது !!!!!!!!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, June 24, 2005

"மெட்டிஒலி" விமர்சனம் --- A DROP in "அந்திமழை" !!!

திருவாளர் மாயவரத்தானின் மகுடம் போல் என் சிறிய மகுடத்திலும் ஒரு சிறிய சிறகு நேற்று ஏறியது :-) அந்திமழைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

பிரபல வலைப்பதிவர்களான அருண், தேசிகன், பத்ரி ஆகியோரைப் பற்றி எழுதிய
அந்திமழை என்னைப் பற்றியும் என் வலைப்பதிவு குறித்தும் எழுதியது மகிழ்ச்சி அளிக்கிறது !!! இவ்வாறு அறியப்படுவது, நான் நிறையவும், இன்னும் நிறைவாகவும் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தையும், ஆர்வத்தையும் எனக்கு அதிகப்படுத்துகிறது!

இதே கட்டுரையில் S.சங்கர் என்ற புதிய வலைப்பதிவரைப் பற்றியும் எழுதப் பட்டிருக்கிறது. என்னையும் S.சங்கரையும் பற்றி ஒரே சமயத்தில் அந்திமழை எழுதியதால், ஒரு வியப்பு தரும் செய்தியை சுட்டிக் காட்ட விழைகிறேன்.

சங்கருக்கு வலைப்பதிவுலகத்தை அறிமுகப்படுத்தியதும், அவரது வலைப்பூவை வடிவமைத்துக் கொடுத்ததும் சாட்சாத் பாலாவே (நான் தானுங்கோ !) தான் !!!

மேலும், சங்கர் என் நீண்ட நாள் (கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் !) நண்பரும் கூட !

"எழுதுவதோடு மற்ற வலைப்பூக்களில் ஆக்கப்பூர்வமான மறுமொழிகளையும் பதிக்கிறார்" --- இதாங்க நம்மளப் பத்தின அந்திமழையோட Highlight !!! அப்றம், நீங்க சொல்லுங்க !

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, June 20, 2005

மெட்டி ஒலி எனும் 'மெகா' பாரதம் --- பாலா SPECIAL

இப்படித் தான் வைரமுத்து, மெட்டி ஒலியை 'மெகா' பாரதம் என்று மெட்டி ஒலியின் முடிவு விழா உரையில் வர்ணித்தார் ! அதற்கு, எப்படி இதிகாசங்களான மகாபாரதமும் ராமாயணமும் பல அழகான கிளைக்கதைகளின் தொகுப்போ, அவ்வாறே மெட்டிஒலியும் என்று ஒப்பிட்டுக் கூறினார். மெட்டிஒலி ஏறக்குறைய 811 episodes (அதாவது, 162 வாரங்கள் !) கொண்ட ஒரு தொடராக சன் டிவியில் ஒளிபரப்பானது. இதில் நான் ஒரு 150 episodes தான் பார்த்திருப்பேன் ! இருந்தும் எனக்கு கதையை புரிந்து கொள்வதில் ஒருபோதும் பிரச்சினை இருந்ததில்லை !!!!!

மெட்டிஒலி பலரது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே ஆனது. தொடரின் கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மக்கள் பிரச்சினைகள் ஆயின ! இத்தொடரின் பத்து எபிஸோடுகளையாவது பார்க்காதவர் தமிழ்நாட்டிலேயே கிடையாது என்று அடித்துக் கூறலாம். அவ்வளவு பிரபலம் அடைந்தது !

யதார்த்தமான மற்றும் தரையைத் தொடும் (down-to-earth !) கதையமைப்பு மெட்டிஒலிக்கு பக்கபலமாக இருந்தது. ஆனாலும், சரோ கதாபாத்திரம் வாயிலாக பெண்ணடிமைத்தனத்தையும், ராஜம்மா கதாபாத்திரத்தின் மூலம் கொடூரத்தையும் இவ்வளவு அதிகபட்சமாக காட்டியிருக்க வேண்டாம் என்பது என் கருத்து. இது எதிர்மறை விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது ! தொடரில் வரும் சிதம்பரம் என்ற முக்கிய கதாபாத்திரம் பிரச்சினை இல்லாமல் இருந்த நாளே கிடையாது எனலாம். ஆனாலும் அவர் வெளிப்படுத்தும் சீர் தூக்கி நோக்கும் குணமும், மன உறுதியும் அலாதியானது. டெல்லி குமார் இவ்வேடத்தில் வாழ்ந்திருந்தார் என்று கூறலாம்.

மெட்டி ஒலி குடும்ப சச்சரவுகளையும், ஆணாதிக்கத்தயும் அதிகமாக பிரதிபலிப்பது போல் தோன்றினாலும், எல்லோரும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. தந்தை மகள்களுக்கு இடையே ஆன கவிதை கலந்த உறவை, இயக்குனர் திருமுருகன் நேர்த்தியாக, தொடரில் வரும் பல நிகழ்வுகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். செல்வம் என்ற கதாபாத்திரத்திரம், நிஜ வாழ்வில் பல ஆண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டதோடு, அதில் நடிப்பவரும் பாத்திரத்தை உள்வாங்கி, மிக அருமையாக நடித்துள்ளார்.

மெட்டி ஏற்படுத்திய ஒலியால், ஒன்பது மனிக்கு வேலையிலிருந்து பசியோடு வீடு திரும்பும் கணவன்மார்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாயினர் ! தாய்மார்கள் அழும் குழந்தைகளை மெட்டிஒலி தொடங்குவதற்கு முன்பே உணவு கொடுத்து உறங்க வைத்தார்கள் ! கூட்டுக் குடும்பங்களில் வாழும் இளம்தம்பதியினருக்கு கொஞ்சிப் பேச அவகாசம் கிடைத்தது ! ஊர் சுற்றி விட்டு வரும் பிள்ளைகள் மெட்டிஒலி சமயத்தில் பெற்றோரிடம் திட்டு வாங்காமல் நைசாக வீட்டுக்குள் நுழைய வழி ஏற்பட்டது. நகரின் ஒதுக்குப்புற வீடுகளில் திருடர்கள் தங்கள் கை வண்ணத்தை காட்ட வழி ஏற்பட்டது !

மெட்டிஒலி பார்த்த சில கணவர்கள் தாங்கள் ரவி மற்றும் மாணிக்கம் (கதாபாத்திரங்கள்!) போல் அவ்வளவு மோசமாக இல்லை என்று உள்ளுக்குள் சந்தோஷம் அடைந்தனர். சிலர் கோபியும் தங்களை போல் ஒரு பெண்டாட்டி தாசன் என்று சிலாகித்தனர். இன்னும் சிலர், போஸ் போல தங்களது மனைவிகளை விட்டு எகிற முடியலையே என்று ஆதங்கப்பட்டனர். சில மாமியார்கள் ராஜம்மாவை விட தாங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று மருமகள்களிடம் சுட்டிக் காட்டினர். சில பெண்கள் தாங்கள் தனம் போல வாயாடியாகவும், செல்வத்தின் மனைவி போல் ஓடுகாலியாகவும், கோபியின் வீட்டுப் பெண்கள் போல வம்படிப்பவர்களாகவும் இல்லை என்று ஆறுதல் அடைந்தனர்.

மெட்டிஒலியால் சில நேர்மறை விளைவுகளும் உண்டு ! மெட்டிஒலி பார்த்து, செல்வம் போல் ஒரு நல்லதம்பி இல்லையே என்று எண்ணிய அண்ணன்மார்களும், சிதம்பரம் போல் ஒரு பாசமிகு தந்தை இல்லையே என்று நினைத்த மகள்களும், போஸ் போல பாசமான மருமகன் இல்லையே என்றெண்ணிய மாமன்களும், ரவியின் தந்தை போல மாமனார் இல்லையே என்று நினைத்த மருமகள்களும் நிச்சயமாக உண்டு ! கணவனிடம் அல்லல்பட்டு, சொந்தக்காலில் நின்ற லீலாவையும், கணவனால் கைவிடப்பட்டும் வாழ்வை துணிந்து எதிர்கொண்ட நிர்மலாவையும் பார்த்து தன்னம்பிக்கை பெற்ற பெண்களும் இருப்பர்.

இந்த மெகா காவியத்தை ஒருவர் உட்கார்ந்து தொடர்ச்சியாகப் (back to back !) பார்ப்பதன் வாயிலாக ஒரு கின்னஸ் சாதனையே படைத்து விடலாம் ! ஒரு எபிஸோட் 20 நிமிடங்கள் (விளம்பர இடைவேளை தவிர்த்து) என்று வைத்துக் கொண்டால் கூட மெட்டிஒலியை (இடைவெளியே இல்லாமல்) முழுதும் பார்த்து முடிக்க, 16220 நிமிடங்கள் அல்லது 270 மணிநேரம் அல்லது 11 நாட்கள் ஆகும் !!!

முன்பு சன் டிவியில் "சித்தி" தொடர் ஒளிபரப்பாகி கொண்டிருந்தபோது, பொதுவாக, அது தொடங்கும் நேரம் தான் நான் பணியிலிருந்து வீடு திரும்புவேன். என்னைக் கண்டவுடன் என் மகள் (அப்போது நாலு வயது) "சித்தி வந்தா தான் அப்பா வருவா" என்பாள். நான் உற்சாகமாக, "அம்மாவிடம் பெர்மிஷன் கேளு, உனக்கும் சித்தி வருவா" என்பேன் !!! உடனே, என் துணைவியார் ஒரு முறை முறைத்து, "போதுமே, உங்கள் தத்துப்பித்தை குழந்தையிடமும் காட்ட வேண்டுமா ?" என்பார்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, June 15, 2005

புது வலைப்பதிவர்க்கு TOP 10 HOT TOPICS !

நீங்கள் தமிழ் வலைப்பதிவுகள் வாயிலாக உலகப் பிரசித்தி பெறவும், உங்கள் பதிவுகள் கவனிக்கப்படவும், தங்களுக்கு அதிக வாசகர்கள் மற்றும் பின்னூட்டங்கள் கிடைக்கவும், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஒன்றை பற்றி உங்களது கருத்துக்களை எழுதுவது தான் !!! நீங்கள் துரிதமாக பிரபலமடைய / புகழ் பெற (15 நிமிடம் அல்ல!) இதுவே சிறந்த வழி என்று தெளிவது அவசியம் :)

10. கலாச்சார சீரழிவு மற்றும் நவீனப் பெண்ணியம்
9. இஸ்ரேல் - பாலஸ்தீனிய பிரச்சினை
8. தமிழ் குடிதாங்கிகளின் செயல்பாடுகள் ... மொழிப்போர் கலாட்டா
7. தினமலர் ஆதரவு அல்லது எதிர்ப்பு
6. ரோசாவசந்த் / டோண்டு / PKS அவர்களின் ஏதாவது ஒரு பதிவின் பின்னூட்டக் களத்தில், ஒரு நிலைப்பாட்டை எடுத்து, படு காட்டமாக விவாதம் செய்வது !!!
5. தமிழக வாரிசு (பா.ம.க, தி.மு.க) அரசியல் !
4. ரஜினி குறித்து விமர்சனம்
3. பெரியார் குறித்து விமர்சனம்
2. பழம் / நவ பார்ப்பனீயம் குறித்த அலசல்
1. விடுதலைப்புலிகள் எதிர்ப்பு


எச்சரிக்கை: மேற்கூறியவற்றை குறித்து எழுதுவதற்கு முன், அவை பற்றி ஓரளவு படித்துத் தெளிவது நல்லது !!! இல்லையெனில் Subject Experts உங்களை பந்தாடி விடுவார்கள் !!!

DISCLAIMER: இந்த தலைப்புகளை வைத்து நீங்கள் எழுதுவதால் உங்களுக்கு ஏற்படக்கூடிய மனஉளைச்சலுக்கோ, இன்னபிற உபாதைகளுக்கோ, சங்கடங்களுக்கோ(!) நீங்களே பொறுப்பாவீர்கள். உதாரணமாக, அனாமதேயங்கள் வசை பாடலாம், உங்கள் பெயரிலேயே போலிகள் பல பதிவுகளில் பின்னூட்டி பெயரைக் கெடுக்கலாம் !!!

Anyway, Try your luck and ALL THE BEST ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, June 13, 2005

இந்தியாவில் பயங்கர "சுடோகு" காய்ச்சல் பரவுகிறது !

***********************************************************
**********************************************************
***********************************************************
***********************************************************
***********************************************************

ஜப்பானிலிருந்து உருவான "சுடோகு" (SUDOKU) என்ற எண்கணித விளையாட்டு, இந்தியாவில் அதிவேகமாக பிரபலமடைந்து வருகிறது !!! உலகம் முழுவதும், இணையம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பரவி வரும் இவ்விளையாட்டை பல ஆங்கில தினசரிகள் (ஹிண்டு, ஹிந்துஸ்டான் டைம்ஸ், டெக்கான் குரோனிகள் ...) பிரசுரிக்கின்றன.

சுடோகு, கீழுள்ள படத்தில் உள்ளது போல், ஒரு (9X9) கட்டங்களாக (மேலும் ஒன்பது சிறு (3X3) கட்டங்களாகவும்) பிரிக்கப்பட்ட சதுரத்தில், சில கட்டங்களில் எண்கள் நிரப்பப்பட்டு காணப்படும். ஆட்டக்காரர், மீதியுள்ள கட்டங்களை, 1 முதல் 9 வரை உள்ள எண்களால், ஒரு எண் அது இடம் பெற்றிருக்கும் நீளவாக்கு வரிசையிலோ, அகலவாக்கு வரிசையிலோ, (3X3) சிறு சதுரத்திலோ, மீளவும் இடம் பெறாமல் நிரப்ப வேண்டும் !

Image hosted by Photobucket.com

ஜப்பானில், எண்பதுகளிலேயே பிரபலமான சுடோகு, இப்போது தான் உலகளாவிய மக்களின் ஆர்வத்தை தட்டி எழுப்பியுள்ளது. ரூபிக் கியூப் (RUBIK CUBE) ஒரு காலகட்டத்தில் சிறுவர்களையும், இளைஞர்களையும், பெரியவர்களையும் ஒருசேர வசப்படுத்தியது போல் தற்போதைய "சுடோகு" நிலைமையும் காணப்படுகிறது. எழுத்து விளையாட்டை (CROSSWORD PUZZLE) விடவும் சுடோகு அதிக பிரபலமாகும் என்று தோன்றுகிறது.

சுடோகு எண்கள் சம்மந்தப்பட்ட விளையாட்டு என்றாலும், அதன் கட்டங்களை நிரப்புவதற்கு பெரிய கணிதத் திறமை தேவையில்லை என்பதே இது மேலும் பிரபலமடைவதற்கு முக்கிய சாத்தியமாகத் தெரிகிறது ! எழுத்து விளையாட்டைப் போல சுடோகு விளையாட மெத்தப் படித்தவராகவும், சம்மந்தப்பட்ட மொழியில் நுண்ணறிவு மற்றும் பொது அறிவு உடையவராகவும் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

முரளி தேசிகன் என்ற மென்பொறியாளர், எந்தவொரு சுடோகுவின் அனைத்துக் கட்டங்களை நிரப்புவதற்கு ஒரு ஜாவா புரோகிராம் எழுதியுள்ளார் என்ற செய்தியும் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, June 10, 2005

நாட்டாமை, தலைப்பை மாத்தி வை !!!

கார்த்திக்கின் இந்தப் பதிவு தந்த உற்சாகத்தில், நமது வலைப்பதிவர் சிலரின் தலைப்புகளை மாற்றினால் எப்படி இருக்கும் என்று விபரீத கற்பனை செய்ததன் விளைவு கீழுள்ளவை.
யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் :)
சும்மா ஒரு ஜாலிக்குத் தான் !!!

முதலில் தமிழ்மணத் தலைவரிடமிருந்து தொடங்குகிறேன் !

காசி --- சித்தூர்க்காரனின் சிந்தனைக் குதறல்கள் அல்லது சித்தூர்க்காரனின் சிதறிய சிந்தனைகள்
தேசிகன் --- தேசிகன் வலைப்பதிவுக்கு வரலேன்னா ஜாக்கிரதை !
கார்த்திக் --- karthik's EVERYTHING is CLOGS !
ரோசாவசந்த் --- ஒரு குட்டி பூர்ஷ்வாவின் சண்டையும், சச்சரவும் சில செருப்படிகளும்
டோண்டு ராகவன் ---- Dondu's 'DONTS' ONLY
ஐகராஸ் பிரகாஷ் --- Prakash's "CHRONIC"les
அல்வாசிட்டி விஜய் --- அடிச்சுக் கொல்லு !
மூக்கு சுந்தர் --- என் கோக்குமாக்கு
தங்கமணி --- E(n) அலறல்
மாண்ட்ரீசர் --- விக்கல்
ராம்கி --- சில்லுண்டியின் பெருங்குழப்பங்கள்
மாயவரத்தான் --- ஆயிரம் ஆனாலும் நக்கல் போகாது !!! (அல்லது Narrow vision!)
இரவிக்குமார் --- நீங்கள் கேட்காதவை !!!
காஞ்சி பிலிம்ஸ் --- பாஞ்சிக் கடி !
ஆச்சி மகன் ---- சுற்றத்தின் கொடுமை
வந்தியத்தேவன் --- தொடரும் வம்படி !!!
என்றென்றும் அன்புடன் பாலா ---- ????????????????????


என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails